ரஷ்யாவிடமிருந்து அவசரமாக மிக் 29 ரக போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா! இதுதான் காரணம்
டெல்லி: ரஷ்யாவிடமிருந்து அவசரமாக மிக் 29 (MiG 29), ஜெட் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய விமானப்படையில், காம்பேட் ரக விமானங்களுக்கான பற்றாக்குறை உள்ளது. இதை ஈடு செய்ய அவசரமாக மிக்29 வகை போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம், இந்திய கருவூலத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ஜெட் விமானத்திற்கான செலவு ரூ.285 கோடி என்ற வகையில், 21 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இரு நாட்டு மட்டத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உபகரணங்கள்
இந்த வகை விமானத்தில் ஆயுத சிஸ்டம், பயிற்சி மற்றும் பிற சப்போர்ட் உபகரணங்கள் இருக்கும். ரபேல் விமானங்களைவிட மிக்29 வகை ஜெட் விமானங்கள் செலவு குறைந்தவை. ஏனெனில் ரபேல் விமானங்கள் ஒன்றின் விலை ரூ.1611 கோடி என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரபேல் விட விலை குறைவு
மிக் 29 வகை போர் விமானங்களை பொறுத்தளவில், புதிதாக மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆயுத பேக்கேஜ்களுடன் உள்ளடங்கியதாகும். எனவே இந்த விலை என்பது மிக குறைவுதான் என இந்திய அரசு கருதுகிறது. போர் விமானங்களின் எண்ணிக்கைக்கான அனுமதி 42 வரை உள்ள நிலையில், தற்போது இந்திய விமானப்படையிடம் 31 விமானங்கள்தான் உள்ளன.
நீண்ட கால தொடர்பு
1980களில் இருந்தே ரஷ்யாவின் மிக் வகை போர் விமானங்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது. மிக் விமான ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், அவற்றை அப்கிரேட் செய்யவும், 2008ம் ஆண்டு இந்திய விமானப்படை ரூ.3850 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் செய்தது. அவை தற்போது வழக்கமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கடற்படை
இந்திய கடற்படையும், மிக்29 ரக விமானங்களை பயன்படுத்துகிறது. இவை கடற்படைக்காக விஷேச அம்சங்கள் கொண்டவை. கடற்படையிடம் மிக் 29கே மற்றும் கேயூபி போர் விமானங்கள் மொத்தம் 45 பயன்பாட்டில் உள்ளன. கடைசியாக 2010ம் ஆண்டில், கடற்படைக்காக மிக் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.