எல்லையில் தொடரும் பதற்றம்.. இந்திய வீரர்களை சீன படைகள் பிடித்து வைத்திருந்த தகவலை மறுத்த இந்தியா
டெல்லி: இந்தியா- சீனா இடையே சிக்கிம் எல்லையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தினரையும் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரையும் சீன படைகள் பிடித்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சிக்கிம் மற்றும் லடாக் எல்லை பகுதிகளில் சீனா அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் லடாக்கின் வடக்கு பாங்கோங் த்சோ பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தியா சாலை பணிகளில் ஈடுபட்டிருந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இன்னொரு பக்கம் கடந்த சனிக்கிழமை வடக்கு சிக்கிமின் நாகூ லா பகுதியில் இந்திய - சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு காயமடைந்தனர். அன்று முதல் எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் கூடுதலாக வீரர்களை எல்லைகளில் குவித்து வருகிறார்கள்.
என் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்!
தகவல்கள்
இந்த நிலையில் சிக்கிம் பகுதியில் கடந்த வாரம் நடந்த மோதலின் போது இந்திய ராணுவத்தினரையும் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களையும் சீன ராணுவம் சிறிது நேரம் பிடித்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
மறுப்பு
அவர்கள் பிடிக்கப்பட்ட சில நேரத்தில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை இந்திய ராணுவ படை மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் எல்லைகளில் இந்திய வீரர்கள் யாரும் பிடித்து வைக்கப்படவில்லை.
அத்துமீறல்
இதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். ஆதாரமற்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதால் அது தேச நலனை பாதிக்கிறது. இந்திய பகுதியில் நம் படைகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்திய எல்லையில் சீனாவின் எந்தவித அத்துமீறல்களையும் அனுமதிக்க மாட்டோம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லையில் மோட்டார் படகுகள் மூலம் அத்துமீறிய சீன படைகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்து வருகிறது.
இந்தியா
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் நிலையை அறிவதற்காக லே பகுதிக்கு ராணுவத் தளபதி எம்.எம். நரவனே நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது. எல்லை பிரச்சினை தொடர்பாக 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் லடாக்கில் இன்னமும் பதற்றம் தணியவில்லை.
மோதல்
பாங்கோங் த்சோ பகுதியிலும் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலும் சீனா தனது படைகளை வேகமாக குவித்து வருவதை பார்த்தால் இந்தியாவுடனான மோதலை நிறுத்த தயாராக இல்லை என்றே தெரிகிறது.