1972ல் கொல்லப்பட்ட.. பாக். அதிகாரியின் சமாதியை சீரமைத்த இந்திய ராணுவம்!
டெல்லி: எதிரியாகவே இருந்தாலும் மரணத்திற்குப் பின்னர் உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்பது போர் நியதி. அந்த அடிப்படையில் 1972ம் ஆண்டு நடந்த மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சமாதியை இந்திய ராணுவம் சீரமைத்துள்ளது.
1972ம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அந்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. நெளகாம் செக்டார் பகுதியில் சீக்கிய படைப் பிரிவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் தரப்பில் மேஜர் முகம்மது சுபைத் கான் என்ற அதிகாரி கொல்லப்பட்டார். அவர் இந்தியப் பகுதியில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டபோது நமது படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுபைத்கானுக்கு பாகிஸ்தான் அரசு அந்த நாட்டின் உயரிய ராணுவ விருதான சித்தாரா இ ஜூரத் என்ற பதக்கத்தை அளித்துக் கெளரவித்தது. இந்த நிலையில் கொல்லப்பட்ட சுபைத் கான் இந்திய ராணுவத்தினரால் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டார். அதேசமயம், அவரது சமாதி பின்னர் கவனிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது
இந்த நிலையில்தான் இரு நாட்டு ராணுவ உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக சுபைத் கானின் சமாதியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணியில் 2 மராத்தா லைட் இன்பேன்டரி பிரிவினர் ஈடுபட்டனர். இதையடுத்து சுபைத் கான் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சீரமைத்து, அதை ஒரு சமாதி போல மாற்றி விட்டனர். அந்த இடம் பார்க்கவே இப்போது "நீட்"டாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 50 வருடமாக இந்தப் பகுதியில் பலமுறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் சுபைத் கானின் உடல் புதைக்கப்பட்ட இடம் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் இருந்து வந்தது. தற்போது அதை சீரமைத்துள்ளோம். எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் இவரும் ஒரு வீரர்தான். மரணத்திற்குப் பின்னர் ஒருவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்கள் கொடுத்துள்ளோம் என்றார் அவர்.
இந்தியாவைப் பொறுத்தவரை நமது படையினரால் பாகிஸ்தான் தரப்பில் யார் கொல்லப்பட்டாலும் இறந்த உடல்களுக்குத் தர வேண்டிய மரியாதையை கொடுக்கத் தவறுவதில்லை. 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போதும் கூட கொல்லப்பட்ட பாகிஸ்தான் படையினரின் உடல்களை உரிய மரியாதையுடன் திருப்பிக் கொடுத்தது இந்திய ராணுவம். பல உடல்களை வாங்க பாகிஸ்தான் மறுத்தபோதும் கூட அவற்றை உரிய முறையில் இந்தியாவிலேயே அடக்கமும் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.