லடாக் வருகிறார் சீன ராணுவ கமாண்டர்.. இந்திய ராணுவ தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை.. எதிர்பார்ப்பு
டெல்லி: மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமாண்டர்கள் அளவில், செவ்வாய்க்கிழமை, கிழக்கு லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கிடையில் இது நான்காவது சந்திப்பு ஆகும்.
இந்த சந்திப்பில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்வாங்கிய சீனப் படைகள்
சீன எல்லைக்குள் வைத்து முந்தைய ராணுவ தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன்பிறகு பிறகு ஜூன் 30 அன்று கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீனப் படைகள் பின்நோக்கி நகர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது சந்திப்பு
ஜூன் 30 ம் தேதி நடைபெற்ற ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்போதைய பின்வாங்கல் படலம் தொடங்கியது, பின்னர் ஜூலை 5 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக சீனப் படைகள் வேகமாக பின்நோக்கி நகரத் தொடங்கின.
ஆயுதங்கள், தளவாடங்கள்
ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இன்னும் சீனப் படைகள் தளவாடங்களுடன் உள்ளன. எனவே நாளைய, பேச்சுவார்த்தையில், இரு தளபதிகளும், இரு நாட்டினரும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை குறைத்துக் கொள்வது பற்றி ஆலோசிப்பார்கள்.
பின்வாங்க கோரிக்கை
ஜூன் 30 லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் தெற்கு சின்ஜியாங் ராணுவ பிராந்தியத்தின் தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் தலைமையிலான பிரதிநிதிகள் இடையேயான ஆலோசனையில், சீனத் துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள மோதல் பகுதிகளில் இருந்து, ஃபிங்கர் பகுதி, கால்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் டெப்சாங் சமவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நிலைமை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ரோந்து நிறுத்தம்
இரு நாடுகளும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்தில், பஃபர் ஜோன்களை உருவாக்கியுள்ளன. அதாவது குறிப்பிட்ட அளவுக்கான எல்லை பகுதியில் இரு நாடுகளும் ராணுவ ரோந்து செய்வதை தவிர்க்கின்றன. சில வல்லுநர்கள் இது ஒரு அவசியமான நடவடிக்கையாகக் கருதினாலும், மற்றவர்கள் ரோந்து உரிமைகளை தற்காலிகமாகக் குறைப்பது இந்தியாவின் இருப்பு மற்றும் கட்டுப்பாட்டைக் குறைத்துவிட வழி வகுக்கும் என எச்சரிக்கின்றனர்.