முப்படை தளபதிகளை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்.. பரபர ஆலோசனை.. முக்கிய முடிவு?
இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்றுநேரத்தில் சந்திக்கிறார்.
டெல்லி: இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்றுநேரத்தில் சந்திக்கிறார்.
பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 50கிமீ வரை புகுந்து இந்திய விமானப்படை அங்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் அங்கு இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 4 தரைமட்டமாக்கப்பட்டது. இதில் 300 தீவிரவாதிகள் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதீத போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய எல்லையில் நேற்று மாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து தற்போது இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளை சற்றுநேரத்தில் சந்திக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, ராணுவ படை தளபதி பிபின்ராவத், கடற்படை தளபதி லம்பா ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்.
இதில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் முப்படை தளபதிகள் வைத்த முக்கிய கோரிக்கை ஒன்றை குறித்தும் ஆலோசிக்க இருக்கிறார்கள். பாகிஸ்தான் மீதான பதிலடி குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.