உங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா
Recommended Video
டெல்லி: இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்ற அமெரிக்காவின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்து தீவிரவாத கும்பல் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், எந்த ஒரு வெளிநாட்டு அரசிடமும் நற்பெயரை எதிர்பார்க்கவிலலை என இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சர்வதேச மத சுதந்திரம் குறித்து 8 பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சுதந்திரம் குறித்த அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது. அதில் இந்தியாவில் மத சுந்திரம் இல்லை என்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்து தீவிரவாத கும்பல் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்திய அரசு 'பசு குண்டர்களின்' தாக்குதல்கள், குழு வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக செயல்படவில்லை என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறு செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்றும், சிறுபாம்மையினர் உரிமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த அறிக்கையால் கடும் ஆத்திரம் அடைந்துள்ள இந்தியா அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு வெளிநாட்டு அரசு மற்றும் நிறுவனத்திடமிருந்து எந்தவொரு நற்பெயரையும் இந்தியா எதிர்பார்க்கவில்லை:என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் கூறுகையில், "இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. சகிப்புத்தன்மை மற்றும் நீண்ட கால அர்பணிப்பு கொண்ட பன்மைத்துவ மக்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் அடிடை உரிமைகளை உறுதி செய்கிறது. மேலும் மத சுதந்திரத்தை பாதுகாக்கிறது. ஜனநாயக நிர்வாகம் அடிப்படை உரிமைகளை மேலும் பாதுகாக்கும். எந்த ஒரு வெளிநாட்டு அரசும், நிறுவனமும் எங்கள் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறோம் என கூறவேண்டிய அவசியம் இல்லை. மதசுந்திரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவின் உள்நாட்டு விவாகரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்' இவ்வாறு கூறியுள்ளார்.