இம்ரான்கானுக்கு எச்சரிக்கை.. மலேசியா, துருக்கிக்கு கோரிக்கை.. காஷ்மீர் விஷயத்தில் இந்தியா கறார்
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு "சர்வதேச உறவுகளை எவ்வாறு பேணுவது என்று தெரியவில்லை" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா பொதுச் சபையில் காஷ்மீரை பற்றி பேசியதற்காக, மலேசியாவையும் நட்புணர்வோடு கடிந்து கொண்டுள்ளது இந்தியா.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில், இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் குறித்து இந்தியாவின் சமீபத்திய முடிவு முற்றிலும் உள்நாட்டு விஷயம். ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவி கைப்பற்றி வைத்துள்ளது. எனவே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும்.
ஐநாவில் இம்ரான் கான், ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற பேச்சை விதைத்துள்ளார். சர்வதேச உறவுகளை எவ்வாறு பேணுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத்துக்கு (புனிதப்போர்) வெளிப்படையான அழைப்பை விடுத்துள்ளார் இம்ரான்கான். இது சாதாரணமானது அல்ல.
Raveesh Kumar MEA on Turkey raising Kashmir issue at UNGA: We call upon the Turkey govt to get a proper understanding of the situation on the ground before they make any further statements on this issue. It is a matter which is completely internal to India. pic.twitter.com/1kyo4xGLEr
— ANI (@ANI) October 4, 2019
ஐ.நா. கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை கிளப்பியுள்ளது மலேசியா மற்றும் துருக்கி. மலேசியா அரசு, இந்தியாவுடன் உள்ள இரு நாட்டு உறவுகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது.
இந்த விவகாரத்தில் மேலதிக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர், காஷ்மீரின் நிலைமை குறித்து சரியான புரிதலைப் பெறுமாறு துருக்கி அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது முழுமையாக இந்தியாவின் உள்நாட்டு விஷயமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.