இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு சூப்பர் வெற்றி.. அபிநந்தன் மீட்கப்பட்டது எப்படி?
Recommended Video
டெல்லி: இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் விடுதலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்ற பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.
இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நேற்று, சிறை சிறை பிடிக்கப்பட்டார். அவரை கையில் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
ஆனால், பாகிஸ்தானுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இன்று பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பியது.
சமரசம் இல்லை
இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடுகள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, அபிநந்தனை வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது குறித்து இந்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, அபிநந்தன் மீட்டுக் கொண்டு வருவதற்காக எந்தவொரு சமரசமும் பேசப்படவில்லை. இது இந்திய அரசின் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றனர்.
பின்னடைவு வீடியோ
இந்திய விமானியை மீட்பதில் சர்வதேச நாடுகளின் நெருக்கடியை பாகிஸ்தானுக்கு கொடுப்பதில் இந்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் அபிநந்தன் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இந்த வீடியோ, ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதை உலக நாடுகளுக்கு புரிய வைத்தோம். அவர்கள் இந்தியாவை அவமானப்படுத்த வெளியிட்ட இந்த வீடியோ பாகிஸ்தானுக்கு ஒரு பின்னடைவாக மாறியது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இதையடுத்துதான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அபிநந்தன் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அரபு நாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தானுக்கு நெருக்கடி தருமாறு கேட்டுக்கொண்டார்.
மகிழ்ச்சி செய்தி
இதன் நடுவே தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரைவில் ஒரு நல்ல செய்தி வெளி வர போகிறது என்று சூசகமாக தெரிவித்தார். ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், அபிநந்தனை விடுதலை செய்வதாக இம்ரான் கான் அறிவித்தார். மற்றொருபக்கம் டெல்லியில் தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உட்பட 20 நாடுகளின் தூதர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் எல்லையில் என்ன நடந்து கொண்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்தது.
ராஜதந்திரம்
இவ்வாறு ஒட்டுமொத்தமாக உலக நாடுகளில் நன்மதிப்பை இந்தியா பெற்றுக்கொண்டு, பாகிஸ்தானை தனிமைபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டது. இந்தியாவின் ராஜ தந்திர முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்த தினம் இன்று என்று, அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.