கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை.. ஏன் தெரியுமா
டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ரெம்டெசிவர் ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஆட்டம்
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பாதிப்புகள் உள்ளன. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி தட்டுப்பாடு
சில மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மாநிலங்கள் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது. மும்பையில் மட்டும் 71 தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி காலியானதால் மூடப்பட்டதாக தகவல் வெளிவந்தன.
ரெம்டெசிவர் கள்ளச்சந்தையில் விற்பனை
கொரோனா சிகிச்சைக்கு முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டெசிவர் ஊசி மருந்து சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் ஊசி மருந்து விற்பனை கொடி கட்டி பறந்தது. புனேவில் ரெம்டெசிவர் ஊசி மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டும், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும் ரெம்டெசிவர் ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
உற்பத்தி அதிகரிக்க வேண்டும்
இது தொடர்பாக மத்திய அரசு கூறியுள்ளதாவது:- எதிர்வரும் நாட்களில் ரெம்டெசிவிர் ஊசிக்கான தேவை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. எனவே ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் மருந்து கட்டுப்பாட்டுத்துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். ரெம்டெசிவிர் தயாரிக்கும் அனைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களும் தங்கள் இணையதளத்தில் அவர்களின் பங்குதாரர்கள் / விநியோகஸ்தர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.
ஏற்றுமதிக்கு அதிரடி தடை
மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் அதனை சரிபார்க்கவும், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்துதலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரையில் ரெம்டெசிவர் ஊசி மருந்தினை எற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.