கொரோனா முதல் அலையை விட.. 2-வது அலையின் பாதிப்புகள் மிக மிக அதிகம்.. மத்திய அரசு கவலை!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் சென்று வருகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசிகள் பற்றாக்குறை என்பது இல்லை. போதிய இருப்புகள் உள்ளன. சில மாநிலங்கள் தடுப்பூசி வழங்குவதை சரியாக திட்டமிடவில்லை என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டியது.
அதிகரிக்கும் கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்புகள் 1,50,000-ஐ கடந்து செல்கின்றன. மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் கொரோனா கட்டுக்கடங்காமல் செல்கிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று இரண்டாவது அலை முதல் அலையை விட மோசமாக உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளதாவது:- நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் 89.51% பேர், 1.25% பேர் உயிரிழந்துள்ளனர். 9.24% பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை பொறுத்தவரை அது, முதல் அலை பாதிப்பை விட கடந்து செல்கிறது.
இரண்டாவது அலை மோசம்
இரண்டாவது அலையின் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் சென்று வருகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அதே வேளையில் முதல் அலையின் உயிரிழப்புகளை விட, இரண்டாவது அலையின் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. முதல் அலையின்போது தினசரி 1114 உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது இரண்டாவது அலையில் 879 தினசரி உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.
தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை
இந்தியாவில் தடுப்பூசிகள் பற்றாக்குறை என்பது இல்லை. சில மாநிலங்கள் தடுப்பூசி வழங்குவதை சரியாக திட்டமிடவில்லை. இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 13,10,90,370 தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளன. அவற்றில் வீணானது உட்பட மொத்த நுகர்வு 11,43,69,677 தடுப்பூசி அளவுகள் ஆகும். தற்போது முதல் ஏப்ரல் இறுதி வரை 2,01,22,960 தடுப்பூசி அளவுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் உள்ளன என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.