40 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள சீனா.. எதற்கும் தயார்.. நாடாளுமன்ற குழுவிடம் இந்திய ராணுவம் அதிரடி
புதுடெல்லி: சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஐசி) நீண்ட பயணத்திற்குத் தயாராக இருப்பதாகவும், கிழக்கு லடாக் செக்டாரில் கடுமையான குளிர்காலத்திலும் படைகளுடன் தயார் நிலையில் இருப்போம் என்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட துடன் ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
சீன தரப்பிலும் உயிரிழப்பு பலமாக இருந்தது. ஆனால் அதை வெளியில் தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது. ஆனால் அப்போது முதல் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் நீடிக்கிறது.
சீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்!!
பாங்காங் திசோ ஏரி
குறிப்பாக பாங்காங் திசோ ஏரி பகுதியை முழுமையாக சொந்தம் கொண்டாடும் சீனா அங்கு ஏராளமான படை வீரர்களை குவித்து வைத்துக்கொண்டு வெளியேற மறுக்கிறது. படைகள் குறைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் சீனா அடாவடியாக நடந்து கொண்டு வரும் நிலையில் இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்து விழிப்புடன் உள்ளது.
அதிக காலம் ஆகும்
இந்நிலையில் எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றக் குழுவிடம் இந்திய தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத் தலைமையிலான இந்திய இராணுவ அதிகாரிகள், இரு தரப்பினருக்கும் இடையில் படைகளை விலக்கி கொள்ள அதிக காலம் ஆகக்கூடும் என்று தெரிவித்தனர். எனினும் எந்த சூழலுக்கும் இந்திய தரப்பு தயாராக உள்ளது . அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று கூறினார்கள்.
குளிரும் தயார் நிலை
சீன ஆக்கிரமிப்பு குறித்து குழுவுக்கு விளக்கமளித்த இராணுவ அதிகாரிகள், சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஐசி) நீண்ட பயணத்திற்குத் தயாராக இருப்பதாகவும், கிழக்கு லடாக் செக்டாரில் கடுமையான குளிர்காலத்திலும் படைகளை பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியாவின் லடாக் எல்லையில் , சின்ஜியாங்கில் இருந்து துருப்புக்களை கொண்டு வந்து சீனா இறக்கி உள்ளது. லடாக் எல்லையில் சீனர்கள் 40,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களைக் கொண்டு வந்துள்ளனர் . குறிப்பிட்ட பகுதியில் ஏப்ரல்-மே மாதம் முதலே சீனா 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களுடன் அங்கு காணப்படுகிறது. இதையடுத்து படைகளை குறைக்க இந்தியா சீனா உடன் பல நிலை இராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க சீனா படைகளைவிலக்கி கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பேச்சுவார்த்தைகள் இதுவரை பெரிய அளவில் வெற்றிகரமாக முடியவில்லை.
சீனாவுக்கு பதிலடி
தற்போது இந்தியாவும் நன்கு படைகளை தயார்படுத்தி வருகிறது. இரு தரப்பும் சந்திக்கும் பாய்ண்டுகள் மற்றும் டெப்சாங் சமவெளிகளிலிருந்து விலகிச் செல்லுமாறு சீனாவிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் டெப்சாங் சமவெளியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. லடாக் செக்டாரில் இந்திய இராணுவம் இரண்டு கூடுதல் பிரிவுகளை அனுப்பி வைத்துள்ளது.