இந்திய ராணுவத்தில் அதிகரிக்கும் பெண்கள் பங்களிப்பு... ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்வு
டெல்லி: இந்திய ராணுவத்தில் பெண்கள் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் பெண்கள் பங்களிப்பு மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாகவே இந்திய ராணுவத்தில் பெண்கள் நிரந்தரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலையே இருந்தது. அதிகபட்சமாக இந்திய ராணுவத்தில் பெண்களால் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே சேவை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலை கடந்த 2008ஆம் ஆண்டு மாறியது. ராணுவத்தில் உள்ள சில குறிப்பிட்ட பிரிவுகளில் பெண்கள் நிரந்தரமாகப் பணி செய்யும் வகையில் புதிய கொள்கை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன் பின் ராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மூன்று மடங்கு அதிகரிப்பு
கடந்த 2014-15 காலகட்டத்தில் சுமார் மூவாயிரம் பெண்கள் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தனர். அதன் பின், போர் விமானங்கள், போர் கப்பல்களைப் பெண்கள் இயக்க அனுமதிப்பது என பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்தது. இதனால் ஆறு ஆண்டுகளில் தற்போது பாதுகாப்புப் படையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 9,118ஆக உயர்ந்துள்ளது.
பாதுகாப்புப் படையில் பெண்கள்
பல ஆண்டுகளாகவே பெண்கள் ராணுவத்திலுள்ள மருத்துவ பிரிவிலேயே அதிகம் பணியமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால், இந்த நிலை கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக மாறியுள்ளது. இப்போது ராணுவத்தில் 6,807 பெண்களும், விமானப்படையில் 1,607 பெண்களும், கப்பற்படையில் 704 பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பாதுகாப்புப் படையில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. ராணுவத்தில் தற்போதுள்ள வீரர்களில் 0.56% மட்டுமே பெண்கள். அதேபோல விமானப்படையில் 1.08%, கப்பற்படையில் 6.5% என மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
தொடர்ந்து அதிகரிப்பு
பாதுகாப்புப் படையில் சேரும் பெண்களின் எண்ணிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கார்ப்ஸ் ஆஃப் மிலிட்டரி போலீசில் ஆபிசர் அல்லாத பணியிடங்களில் பெண்களுக்கு எனத் தனியாக 1,700 பதவிகளை அரசு உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
ராணுவத்தில் இதுபோல பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும், இன்னும் போர்க்கப்பல்கள், டாங்கிகள் உள்ளிட்டவற்றில் பெண்கள் பணிபுரிய முடியாத நிலையே உள்ளது. முன்னதாக, கடந்தாண்டு ஜூன் மாதம், பாதுகாப்புப் படையிலுள்ள 10 பிரிவுகளில் கட்டளையிடும் முக்கிய அதிகாரிகளாகப் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.