எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
டெல்லி: யாரும் பயப்படத் தேவையில்லை என்று சிறுபான்மையினருக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த அரசாங்கம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ஓபி ரவீந்திரநாத் குடியுரிமை மசோதாவை அறிமுகம் செய்ய ஆதரவு தெரிவித்துள்ளார்.
விவாதத்தின்போது, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை என லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். திமுக, சிவசேனா உட்பட பல கட்சி எம்பிக்களும் பேசிய பிறகு, இரவு சுமார் 10.40 மணிக்கு அமித் ஷா, விவாதங்களுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியதன் மூலம் அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவு மீறப்படவில்லை. இந்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல. மத அடிப்படையில் இந்தியா பிரிக்கப்பட்டிருக்காவிட்டால், குடியுரிமை மசோதா தேவையில்லாமல் போயிருந்திருக்கும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை இஸ்லாமிய நாடுகள். அந்த நாடுகள் சிறுபான்மையினரை வெளியேற்றினால் பாதுகாப்பு வழங்க இந்த மசோதா உதவும். பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 23% இருந்தது. இப்போது 3% வரை குறைக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷிலும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் அமித் ஷா.
ஐ.நா. அகதிகள் ஏற்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்று மனிஷ் திவாரி கூறியதை மறுத்த அமித் ஷா, அகதிகளை நிர்வகிக்க இந்திய சட்டங்கள் போதுமானது என்றும், அகதிகள் ஏற்பாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும் கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (PoK) நம்முடையது, அங்குள்ள மக்களும் நம்முடையவர்கள். இன்றும் கூட, ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் அவர்களுக்கு 24 இடங்களை ஒதுக்கியுள்ளோம்.
இந்த சட்டம் குறித்து, சில அரசியல் கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன. யாரும் பயப்படத் தேவையில்லை என்று சிறுபான்மையினருக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த அரசாங்கம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டுள்ளது. அதேநேரம், ரோஹிங்கியா அகதிகளை ஒருபோதும் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனெனில், மியான்மர் ஒரு மதச்சார்பற்ற நாடு. அதன் அகதிகள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு, வருகிறார்கள்.
இந்திய சிறுபான்மையினர் பயப்பட ஒன்றுமில்லை. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாகுபாடு இல்லை. காங்கிரஸ் ஒரு விதமான மதச்சார்பற்ற கட்சி. அந்த கட்சி, கேரளாவில் முஸ்லீம் லீக் மற்றும் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.