6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி!
டெல்லி: இலங்கை கொழும்பு மற்றும் திருகோணமலையில் இந்திய கடற்படை வீரர்கள் இன்று முதல் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இத்தீர்மானத்தை மத்திய அரசு மதித்து நடக்க வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை.
ஆனால் இலங்கையுடன் நல்லுறவை வளர்ப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் உ.பி. மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மகன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட பவுத்த மத துறவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்திய கடற்படையில் முதல் பயிற்சிப் பிரிவில் உள்ள கடற்படைக் கப்பல்களான சுஜாதா, மகர், சர்துல், சுதர்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை இன்று முதல் வரும் 28ம் தேதி வரை இலங்கையில் பயிற்சி மேற்கொள்கின்றன. வெளிநாட்டில் கடற்படை அதிகரிகளின் 100 மற்றும் 101-வது ஒருங்கிணைந்த பயிற்சிக்காக இந்த கப்பல்கள் சென்றுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் சமூக-அரசியல் மற்றும் கடல்சார் அம்சங்களை தெரியப்படுத்துவதன் மூலம் இளம் அதிகாரிகளின் அனுபவங்களை விரிவுபடுத்துவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுடன் நட்புறவு மேம்படும். இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா தலைமையில் இந்த கப்பல்கள் பயிற்சிக்கு செல்கின்றன.
வெளிநாடுகளைச் சேர்ந்த கடற்படையினருக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கடற்படை பயிற்சி அளித்து வருகிறது. தற்போதுவரை, இலங்கையைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த 4 நாள் இலங்கைப் பயணத்தில், இந்திய கடற்படையின் மகர் மற்றும் சர்துல் ஆகிய கப்பல்கள் 101-வது பயிற்சிப் பிரிவினருடன் கொழும்பு செல்கின்றன.
தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!
சுஜாதா, சுதர்ஷினி, தாராங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை 100-வது பயிற்சிப் பிரிவினருடன் திரிகோணமலை செல்கின்றன. இருநாட்டு கடற்படைகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், பலவிதப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. பயிற்சியில் ஈடுபடும் அவைருக்கும் இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன மற்றும் கொவிட்-19 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.