ஹஜ் புனித யாத்திரை செல்ல அனுமதியில்லை - பணத்தை திருப்பி தர மத்திய அரசு முடிவு
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
டெல்லி: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு சென்று வழிபடுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஹஜ் புனித பயணம் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டப்போகிறது.49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்றாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டப்போகிறது. நாளுக்கு நாள் வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதால் உலகம் முழுவதும் ஒருவித அச்சம் நிலவுகிறது.
கொரோனா நோய் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை நான்கரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் சமூக விலகல் அறிவுறுத்தப்பட்டு ஆறாம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் ஜூன் 30 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடமையான ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக சவுதி அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மெக்கா நகருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து அதிகளவில் மக்கள் புனித பயணம் மேற்கொண்டால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதேநேரம் சவூதிஅரேபியாவில் வசித்து வரும் வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கோள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹஜ் புனிதப் பயணம்... வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனுமதி இல்லை... சவுதி அரேபியா திட்டவட்டம்
இதனிடையே இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் முக்தர் அப்பாஸ் நக்வி கூறி உள்ளார்.