ரயில் பயணிகளே… புதிய வாட்ஸ்அப் நம்பரை நோட் பண்ணிக்கணும்.. ரயில்வே அறிவிப்பு
டெல்லி:ரயிலின் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே துறையானது புதிய வாட்ஸ்-அப் நம்பரை அறிவித்துள்ளது.
ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரயில்வே துறை பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 'வாட்ஸ் அப்' மூலம் ரயிலின் வருகை குறித்து பயணிகள் அறிந்துக்கொள்ள '7349389104' என்ற மொபைல் எண்ணை அறிமுகபடுத்தியுள்ளது.
அந்த எண்ணை போனில் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாட்ஸ்-அப்பில் சென்று சேமித்து வைத்துள்ள 73493- 89104 எண்ணிற்கு பயணிகள் தாங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயிலின் எண்ணை அனுப்ப வேண்டும்.
அப்படி செய்யும்பட்சத்தில், அடுத்த சில நொடிகளில் பயணிகளின் வாட்ஸ் அப்பில் ரயில் எண், அதன் பெயர், எப்போது ரயில் புறப்பட்டது,எந்த ரயில் நிலையத்தைத் தாண்டி உள்ளது,அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் குறுச்செய்திகளாக பெற முடியும்.
இந்த சேவையை இந்தியன் ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது. அதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்கு தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது.