அம்மா பற்றி ஒரே ஒரு டிவீட்.. உடனடி ஆக்சனில் இறங்கிய இந்திய ரயில்வே.. சபாஷ் இப்டித்தான் இருக்கணும்!
டிவீட் மூலம் மகனின் பாசப் போராட்டத்தை தீர்த்து வைத்த இந்தியன் ரயில்வேயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
டெல்லி: ரயில் சென்று கொண்டிருக்கும் தன் தாயைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என மகன் ஒருவர் போட்ட டிவீட்டின் பேரில் அதிரடி ஆக்சன் எடுத்து அசத்தியுள்ளது நம் இந்தியன் ரயில்வே.
சொன்ன நேரத்துக்கு வருவதில்லை, ரயில் பெட்டிகள் தூய்மையாக இல்லை, கழிவறைகளில் நீர் இல்லை, தரப்பட்ட உணவு தரமாக இல்லை இப்படி இந்தியன் ரயில்வே பற்றி நாம் பெரும்பாலும் குறைகளைத் தான் அதிகம் கேட்டிருப்போம். ஆனால், வயதான பெண் பயணிய்ன் மகன் ஒருவர் போட்ட ஒரு டிவீட்டிற்கு உடனடியாக ஆக்சன் எடுத்து, தற்போது சமூகவலைதளங்களில் ஹீரோவாகி இருக்கிறது இந்தியன் ரயில்வே.
வடமாநிலத்தை சேர்ந்தவர் சஷ்வாத். இவர் தனது தாயைக் கடந்த 28-ஆம் தேதி அஜ்மீர் ரயிலில் ஏற்றி விட்டுள்ளார். இரண்டு தினங்களில் சொன்னபடி அந்த ரயில் சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்லவில்லை. இதனால் பதற்றமடைந்த சஷ்வாத், ரயிலில் பயணம் செய்த தன் தாயைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை.
இதனால் கவலையடைந்த அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தனக்கு உதவி தேவை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலையும், இந்திய ரயில்வே துறையும் அவர் டேக் செய்தார்.
சஷ்வாத்தின் இந்தப் பதிவைப் பார்த்த ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. சஷ்வாத்தின் தாயார் பயணம் செய்த ரயிலின் விபரங்களையும், பி என் ஆர்-யும் டிவிட்டர் வாயிலாகவே கோரியது. ஆனால், சஷ்வாத்திற்கு தாயாரின் பி என் ஆர் நம்பர் தெரியவில்லை. எனவே தனது செல்போன் எண்ணை அவர் அளித்தார்.
விரைந்து செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள், அந்த எண் மூலம் சஷ்வாத்தின் தாயாரைக் கண்டுபிடித்தனர். டிடிஆர் மூலம் தாயையும் மகனையும் அவர்கள் பேச வைத்தனர். அப்போது தனது தாய் ரயிலில் பாதுகாப்பாக இருப்பதை சஷ்வாத் தெரிந்து கொண்டார். இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
Sir, I am unable to contact my mother Mrs.Shila Pandey. She is travelling in Ajmer-SDAH Express 12988 with starting date 28-09-2019 in Coach S5, the train is running late by 12 hours. Sir, please help me know if she is there alright.@PiyushGoyal@PiyushGoyalOffc @RailMinIndia
— Sashwat (@curiou_s) September 29, 2019
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கும், பியூஷ் கோயலுக்கும் நன்றி தெரிவித்து அவர் மீண்டும் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. தக்க நேரத்தில் விரைந்து செயல்பட்ட ரயில்வே நிர்வாகத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.