"கேங்மேன்" பணிகள்.. திருநங்கைகளுக்காக முதன் முறையாக விதிகளை தளர்த்திய இந்திய ரயில்வே.. சூப்பர்
புதிய விதிகள் இனி வரும் லெவல்-1 தேர்வுகளுக்கும் பொருந்தும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது
டெல்லி: தற்போது நடைபெற்று முடிந்துள்ள ரயில்வே கேங்மேன் பணிக்கான உடல் திறன் தகுதி தேர்வில்(PET) பங்கேற்ற திருநங்கை ளுக்கு இந்திய ரயில்வே சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
சர்வதேச அளவில் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதற்கு அசாத்தியமான உழைப்பு திறன் தேவைப்படுகிறது.
எனவேதான் இந்திய ரயில்வேயில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவ்வப்போது பணியாட்கள் பணிக்காலம் முடிந்து வெளியேறி வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் உருவாகின்றன. இதனை நிரப்பும் விதமாக அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
பல அசீம்களால் தினமும் கஷ்டப்படுகிறோம்.. ஷிவினை பாராட்டிய.. திருநங்கை தனுஷா கூறிய வார்த்தை
கேங்மேன்
அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு 1 லட்சம் கேங்மேன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றது. தேர்வெழுதிய பல லட்சம் பேரில் வெறும் 2.68 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் 90%க்கும் அதிமாகனோர்(2.53 லட்சம்) ஆண்கள்தான். 15 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள். இவர்கள் தவிர ஒரேயொரு திருநங்கையும் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கிறார்.
உடல் திறன் தேர்வு
இந்நிலையில் இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2ம் கட்ட தேர்வான உடல் திறன் தகுதி தேர்வு கடந்த 19ம் தேதி தொடங்கி 23 மூன்றாம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்றது. இவர்களுக்கு 1,000 மீ மற்றும் 100 மீ ஓட்டப்பந்தயம், பளுதூக்குதல் போன்ற தேர்வுகள் நடைபெற்றன. 2.68 லட்சம் பேரும் தங்கள் திறமையை இதில் வெளிக்காட்டினர். இந்த தேர்வை நடத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரேயொரு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையங்களில் நாளொன்றுக்கு 500லிருந்து 5,000 பேர் வரை பங்கேற்றனர்.
திருநங்கை
இந்நிலையில் இந்த தேர்வில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் பங்கேற்றிருப்பதால் இவருக்கான தேர்வு விதிகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்தது. ஆனால் தற்போது வரை இந்த விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. எனவே எதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற கேள்வியெழுந்தது. இது குறித்து பேச்சுக்கள் மேலெழுந்த நிலையில்தான், புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி இந்த உடல் திறன் தகுதி தேர்வில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு, பெண்களுக்கான விதிகளே திருநங்கைகளுக்கு பொருந்தும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
உத்தரவு
இந்த உத்தரவு அனைத்து பொது மேலாளர்கள், உற்பத்தி பிரிவுகள் மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு செல்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லா எதிர்கால லெவல்-I ஆட்சேர்ப்புக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறியுள்ளது. இந்த தேர்வுக்கு பின்னரான மருத்துவ பரிசோதனையில் திருநங்கையின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் அவர்கள் முறைகேடு செய்துள்ளது கண்டறியப்பட்டால் அவர்களின் மொத்த வேட்புமனுவும் நிராகரிக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் கூறியுள்ளது. எதிர்காலத்தில் திருநங்கைகள் இந்த பணிகளுக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.