முக்கிய திருப்பம்.. கழிவு நீர் வழியாக பரவுகிறது கொரோனா வைரஸ்! அகமதாபாத்தில் நடந்த ஆய்வில் அம்பலம்
டெல்லி: இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக கழிவுநீரில் கொரோனா, வைரஸ் மரபணு கொண்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். கழிவு நீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு தொடர்பான ஆய்வில் இது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
காந்திநகர் ஐஐடி விஞ்ஞானிகள் குழு அகமதாபாத் நகரில், கழிவுநீர் ஆய்வில் ஈடுபட்ட போது இந்த முக்கிய தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் போன்ற மரபணுவை ஒத்து இருக்கக்கூடிய வைரஸ் அங்கு கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பலவும் இதுபோன்ற ஆய்வுகளில் கழிவுநீரில் SARS-CoV-2 வகை வைரஸ் கண்டறியப்பட்டதை உறுதி செய்துள்ளன. அந்த வகையில், தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. கழிவுநீரில் வைரஸ் எவ்வாறு பரவியது, அதை எவ்வாறு தடுப்பது என்பது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள இந்த முடிவுகள் உதவக்கூடும்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேகமாகும் கொரோனா.. கடவுள் மீது பழிபோட்டு தப்பிப்பதா.. டிடிவி தினகரன்
இத்தாலி ஆய்வு
தண்ணீரில் கொரோனா பரவாது என்ற பொது நம்பிக்கைக்கு மத்தியில், கழிவுநீரில் கொரோனா பரவுவதாக தெரியவந்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இத்தாலி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில், கொரோனா வைரஸ் போன்ற மாதிரியிலான வைரஸ்கள், மிலன் நகரில் உள்ள கழிவுநீரில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலியை பொறுத்தளவில் தனது முதல் கொரேனா நோயாளியை, பிப்ரவரி மாதம்தான் பதிவு செய்து இருந்தது. ஆனால் அதற்கு முன்பே கழிவுநீரில் இந்த வகை வைரஸ்கள் பரவல் இருந்துள்ளது.
மேலை நாடுகள் ஆய்வு
பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது போன்ற உண்மைகள் தெரியவந்தன. இதன் மூலம், சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியது அல்லது பரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு முடிவுக்கு வருகின்றது.
ஏனெனில் சீனா முதல் முறையாக இந்த வைரஸ் தாக்கம் தொடர்பாக டிசம்பர் மாதம் 31ம் தேதி உலகத்திற்கு அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பே இத்தாலி போன்ற நாடுகளில் இந்த வைரஸ் காணப்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் உருவாக்கம் என்பது கழிவு நீரில் இருந்து ஆரம்பித்து இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்தியாவில் எப்போது பரவியது
ஒவ்வொரு வைரசும் தன்னைத்தானே மாற்றிக்கொண்டு வடிவமைத்துக் கொள்ள கூடியது. அந்த வகையில் கழிவுநீரில் இதுபோன்ற புதிய வகை வைரஸ் தோன்றியிருக்கக்கூடும் என்று தெரிகிறது. எனவே இந்தியாவிலும் கழிவுநீர் வாயிலாக இதற்கு முன்பே இந்த நோய் யாருக்கும் தாக்கியிருந்து அந்த நோய் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம், அவர்கள் மூலம், அது பரப்பப்பட்டதா அந்த நோயாளிகளுக்கு என்ன ஆனது என்பது பற்றியெல்லாம் புதிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அகமதாபாத் கழிவுநீர்
காந்திநகர் ஐஐடி, குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வு அமைப்பு, குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து மே மாதம் 8ம் தேதி முதல் 27ம் தேதி வரை கழிவு நீரை சேகரித்து இந்த ஆய்வு நடத்தின. அகமதாபாத் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில், தினமும் 106 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சேகரமாகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இருந்து வெளிவரக்கூடிய கழிவுநீரும் இங்குதான் வந்து சேர்கிறது.
பிற நாடுகளை போல
இந்த கழிவு நீரில், SARS-CoV-2ன், மூன்று வகையான வைரஸ் படிமங்களும், இருப்பது தெரியவந்துள்ளது. மே 8ம் தேதி கழிவுநீரில் கண்டறியப்பட்ட வைரஸ் அடர்த்தியை விட, மே 27ம் தேதி 10 மடங்கு அதிக அடர்த்தி இருந்ததாக அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அகமதாபாத் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகரிக்க கழிவுநீரில் வைரஸ் அடர்த்தி, அதிகரித்து கொண்டு இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஆஸ்திரேலியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளின் கழிவுநீரில் கண்டறியப்பட்ட வைரஸைப்போன்று அகமதாபாத் நகரில் கண்டறியப்பட்ட வைரஸ் படிமங்கள் உள்ளன. அதேநேரம், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கழிவுநீரில் கண்டறியப்பட்ட வைரஸ்கள் எண்ணிக்கையைவிட குறைவாக இருக்கிறது.