சிபிஐயை தொடர்ந்து ரிசர்வ் வங்கி.. மோடி அரசில் முக்கிய அமைப்புகளில் தொடரும் பெரும் குழப்பம்
டெல்லி: ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடு இருப்பதால் தனித்தன்மைக்கு சிக்கல் எழுந்துள்ளதாக துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் நடுவே ஏற்பட்ட மோதலால், பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டனர். இருவரையும், மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது நாட்டின் உயரிய நிதி அமைப்பான ரிசர்வ் வங்கியிலும், பிரச்சினை தலை தூக்கியுள்ளது.
[என்னிடம் அஸ்தானா லஞ்சம் வாங்கிய ஆதாரம் உள்ளது.. சிபிஐக்கு எதிராக இன்னொரு சிபிஐ அதிகாரி வழக்கு!]
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர், வைரல் ஆச்சாரியா, ரிசர்வ் வங்கியின் நிதி இருப்பு நிலை அறிக்கையை மேற்கொள் காட்டி தனியாக நிதி ஒழுங்கு அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு முயல்வது மறைமுகமாக ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் தலையிடுகிறது என்று புகார் தெரிவித்தார்.
பொருளாதார சரிவு
மத்திய அரசின் தலையீட்டால் கடன் வசூலில் சரிகட்டும் வகையிலான மேற்பார்வையால் கடுமையான பொருளாதார சரிவு நிலையை சந்திக்க நேரிடுவதாக கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் தனித்தன்மையுடன் இருப்பது கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் போன்று தாமதமாக முடிவு எட்டப்படும். ஆனால் அரசின் தலையீட்டால் டி20 போட்டி போன்று விளைவுகள் உடனுக்குடன் தெரிய வரும் என்று வைரல் ஆச்சாரியா எச்சரித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
வைரல் ஆச்சாரியா பேச்சுக்கு, மத்திய அரசு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாட்டின் உயர் அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு இருப்பதுதான் இதுபோன்ற கொந்தளிப்பான சூழல் நிலவ காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உண்மை என்பதை போலத்தான், மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது என்பதை கடந்த கால நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
உச்சநீதிமன்றத்தில்
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் கடந்த ஜனவரி 12ம் தேதி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் (இப்போதைய தலைமை நீதிபதி), குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய 4 நீதிபதிகள் அன்றைய தினம், உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அப்போது பதவி வகித்த தீபக் மிஸ்ரா செயல்பாடுகளில் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். அது நீதித்துறையின் உச்சத்தில் நடந்த பிரச்சினை என்றால் சிபிஐ போன்ற உச்சபட்ச விசாரணை அமைப்பிலும் தலைவரும், அடுத்த பதவியில் இருந்தவரும் மோதிக்கொண்டனர். இப்போது நிதித்துறையின் உட்சபச்ச அமைப்பான ரிசர்வ் வங்கியிலும் தலைமைக்கும், அதற்கு அடுத்த பதவியில் உள்ளவர்களுக்கும் மோதல் இருக்கிறது. இதில் பெரும்பாலான விஷயங்கள் மத்திய அரசை வெளிப்படையாக குற்றம்சாட்டுவதாக உள்ளன.
மத்திய அரசு தலையீடு
மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒவ்வொரு உட்சபட்ச அதிகார அமைப்பையும் சீர் குலைக்கிறதா என்ற கேள்வியை இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக தன்னாட்சி பெற்ற அமைப்புகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறதோ என்ற சந்தேகங்களை இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.