பரவும் புதிய கொரோனா வகைகள்... 15 நாட்களில் தடுப்பூசி ரெடி.. பாரத் பயோடெக் அதிரடி
டெல்லி: இந்தியாவில் பரவும் கொரோனா வகைகள் குறித்த மரபணு வரிசை தெரிந்தவுடன், புதிய கொரோனா வகைகளுக்கு எதிராக தடுப்பூசியை 15 நாட்களில் உருவாக்க முடியும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 11 கோடி பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 1.56 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகப் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதிரிகள் சேகரிப்பு
மேலும், கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இது குறித்து பயோ ஏசியா மாநாட்டில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் துணை இயக்குநர் நிவேதிதா குப்தா, "வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், ஹாட்ஸ்பாட்களில் இருந்து வைரஸ் மாதிரிகளைச் சேகரித்து வருகிறோம். அவற்றை மரபணு ரீதியில் வரிசைப்படுத்த முயல்கிறோம்" என்றார்.
அதிகரிக்கும் வைரஸ் பரவல்
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல ஐஎம்சிஆருடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது பரவும் உருமாறிய கொரோனா வகைகள் தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படுமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
15 நாட்களில் தடுப்பூசி
தற்போதைய நிலையில் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் இல்லையென்றாலும் தென்னாப்பிரிக்க வகை கொரோனாவை சமாளிக்கும் வகையில் புதிய தடுப்பூசியை 15 நாட்களில் உருவாக்க முடியும் என்று பாரத் பயேடெக் நிறுவனத்தின் சேர்மேன் கிருஷ்ணா எலே தெரிவித்தார். உருமாறிய கொரரோனாவின் மரபணு வரிசை தெரிந்தால் போதும் என்று தெரிவித்த அவர், இதற்காக தயாரிப்பு முறைகளில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வர தேவையில்லை என்றும் கூறினார்.
மரபணு வரிசை
இது குறித்து பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் இயக்குநர் மஹிமா தத்லா கூறுகையில், "தற்போது எந்த வகை வைரஸ் இங்கு வேகமாகப் பரவுகிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், புதிய வகை வைரஸ்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை நாம் தொடங்க வேண்டும். வைரசின் மரபணு வரிசை தெரிந்தாலே புதிய தடுப்பூசியை விரைவில் உருவாக்கிடலாம்" என்று அவர் கூறினார்.