தட்டாமல் கிடைத்த முதல்வர் பதவி.. அசல்ட்டா தூக்கிப் போட்ட அம்பிகா சோனி.. இந்திராவின் 'பிரியதர்ஷினி'
டெல்லி: அரசியல்வாதிகள் எதை எதையோ செய்தாவது முதல்வர் பதவியை கைப்பற்றுவது என்பதை கனவாக கொண்டிருப்பவர்கள்.. ஆனால் நீங்கதான் முதல்வர் என்று கூறியபின்னரும் அதெல்லாம் எனக்கு வேண்டாம் என மறுப்பவரை இன்றைய அரசியலில் காண்பது அரிதாகவே இருக்கும். இந்த அரிதான அரசியல்வாதிகள் பட்டியலில் இணைந்திருப்பவர் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி.
பிளவுபடாத இந்தியாவில் இன்றைய பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர் அம்பிகா சோனி. ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்தார் அம்பிகா சோனியின் அப்பா. 1947-ல் நாடு பிரிவினையை சந்தித்த போது அமிர்தசரஸ் ஆட்சியராகவும் அவர் பணிபுரிந்தார். அப்போதைய பிரதமர் நேருவுடன் இணைந்து செயல்பட்டார் அம்பிகா சோனியின் தந்தை Nakul Sen Wadhwa.
டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?
நேரு குடும்பத்துடன் அன்று தொடங்கிய உறவு இன்று வரை நீடிக்கிறது. அம்பிகா சோனியின் கணவர் வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றியவர். 1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட தருணம்.. அப்போது இந்திரா காந்தி அம்மையாரால் நீ கண்டிப்பாக அரசியலுக்கு வரனும் என கட்டளையிடப்பட்டு அழைத்துவரப்பட்டவர் அம்பிகா சோனி.
சஞ்சய் காந்தியுடன் வலது கரம்
இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த 1975-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவராக உயர்ந்தார் அம்பிகா சோனி. அப்போது அவருக்கு வயது 33. இந்திரா காந்தியின் நிழல் அரசாங்கத்தை நடத்திய சஞ்சய் காந்திக்கு வலதுகரமாக திகழ்ந்தவர் அம்பிகா சோனி. அப்போதே 1976-ல் ராஜ்யசபா எம்.பியானார். பின்னர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராக, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக என காங்கிரஸ் அதிக உயரம் தொட்ட பெண்களில் அம்பிகா சோனி முக்கியமானவர்.
தொடரும் குடும்ப உறவு
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பலமுறை ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். சஞ்சய் காந்தி மறைந்த போதும், இந்திரா காந்தி கொல்லப்பட்ட போதும் கூட நேரு குடும்பத்துடனான உறவை அம்பிகா சோனி துண்டித்துக் கொள்ளவில்லை. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என இன்றளவும் இந்த குடும்ப உறவு தொடருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளில் மத்திய அமைச்சர் பதவி வகித்தார். 2017-ல் உடல்நிலையை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்தார்.
பஞ்சாப் முதல்வர் பதவி- நிராகரிப்பு
தற்போது உட்கட்சி பூசலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பஞ்சாப் பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வர அம்பிகா சோனியை முதல்வராக்க சோனியாவும் ராகுல் காந்தியும் முடிவெடுத்தனர். ஆனால் பஞ்சாப் மக்களின் உணர்வுகளை மதித்து தமக்கு தரப்பட்ட முதல்வர் பதவியை நிராகரித்துவிட்டார் அம்பிகா சோனி. பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை சீக்கியர் ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமருவதே மிகவும் சரியானது என்கிற தெளிவான புரிதலுடன் முதல்வர் பதவி எனும் அரியாசனத்தை அசால்ட்டாக தூக்கிப் போட்டுவிட்டார் அம்பிகா சோனி.
இதுதான் காரணமா?
இருந்தபோதும் 6 மாதத்தில் முதல்வர் பதவி காலம் முடிவுக்கு வந்துவிடும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெல்லுமா என்பதும் உறுதியாக தெரியாது. இந்த காரணங்களுக்காகவும் அம்பிகா சோனி முதல்வர் பதவியை வேண்டாம் என கூறியிருக்கலாம் என்கின்றனர் ஒருசிலர். ஒருநாளேனும் முதல்வர் பதவி கிடைக்காத என ஏங்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தம்மைப் போலவே சற்றே உயர்ந்தே நிற்கிறார் அம்பிகா சோனி எனும் இந்திரா காந்தி அம்மையார் பிரியத்துக்குரியவர் அல்லது இந்திராவின் பிரியதர்ஷினி!