சிந்துசமவெளி மக்கள் மாட்டிறைச்சிகளை உணவாக உட்கொண்டனர்- தொல்லியல் ஆய்வில் புதிய தகவல்
டெல்லி: சிந்து சமவெளி மக்கள் மாட்டிறைச்சிகளையும் அதிக அளவு உணவாக உட்கொண்டதாக தொல்லியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடங்கி பாகிஸ்தான் மற்றும் வட இந்திய பெருநிலப்பரப்பில் சிந்துசமவெளி மக்கள் வேதகாலம் என்பதற்கு முன்னர் வரை பெருவாழ்வு வந்தனர். சிந்துசமவெளி நாகரிகம் அழிந்ததன் பின் வேத காலம் தலையெடுத்த காலத்திலும் கூட வட இந்தியாவில் நாகர்கள் எனப்படும் தொல் தமிழரின் சிற்றரசுகள் இருந்தன.
வட இந்தியாவில் சிந்துசமவெளி சிதிலங்கள்
இந்த நாகர் அரசுகள் அழிவில்தான் மெளரிய பேரசு உருவானது என்பதை வரலாறு விளக்குகிறது. பாகிஸ்தானில் மட்டுமல்ல குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம் என வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் சிந்துசமவெளி வாழ்விடங்கள் இன்றளவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன.
மண்பாண்ட பொருட்கள் அகழாய்வு
ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் சிந்துசமவெளி வாழ்விடங்களில் இருந்து 172 மண்பாண்ட பொருட்கள் அகழாய்வுக்குட்படுத்தப்பட்டன. இந்த அகழாய்வின் முடிவுகள் தொடர்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய தொல்லியல் துறை அண்மையில் சில ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
இறைச்சி பயன்பாடு அதிகம்
இந்த ஆய்வில் மண்பாண்டங்களில் படிந்திருந்த கொழுப்பு படிமங்களை ஆய்வு செய்ததில் ஆடு, மாடுகளை சிந்துசமவெளி மக்கள் உணவாக உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் பெரும்பாலானவை மாடுகளினுடையது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பால் பொருட்கள் எச்ச படிமங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதிக அளவு மாட்டிறைச்சி
இத்தகைய ஆய்வுகளின் முடிவில் சிந்துசமவெளி மக்கள்- தொல் தமிழர்கள் மாட்டிறைச்சியை உணவாக உட்கொண்டனர் என்ற முடிவுக்கு ஆய்வறிஞர்கள் வந்துள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அக்ஷ்யேதா சூரிய நாராயணன் என்ற பிஎச்டி மாணவர் இந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.