நாட்டை அச்சுறுத்தும் பணவீக்கம்.. வட இந்தியாவில் உச்சம்! தமிழ்நாடு, கேரளாவில் பாதிப்பு குறைவு
டெல்லி: ஒட்டுமொத்த இந்தியாவும் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் பிற மாநிலங்களைவிட குறைவான பாதிப்பு இதனால் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் சில்லரை விற்பனை பண வீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
இந்த பணவீக்கத்துக்கு மிக முக்கிய காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கூறப்படுகிறது.
உணவுப் பொருள் மொத்த பணவீக்கம் 71 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு
மேற்கு வங்கம், மத்திய பிரதேசம்
அதே நேரம் பணவீக்கம் என்பது அனைத்து மாநிலங்களையும் சமமான அளவில் பாதிக்கவில்லை. சில மாநிலங்களில் அதிக பாதிப்பையும், சில மாநிலங்களில் குறைவான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது 4 மாநிலங்களில் மட்டும் 9 சதவீதம் பணிவீக்கம் அதிகரித்து உள்ளது. இதில் மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகித்து வருகின்றன.
8 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு
இதற்கு முன் கடந்த 2014 ஆம் ஆண்டு 8.33 சதவீதம் என்ற அளவில் ஏற்பட்ட பணவீக்கமே 8 ஆண்டுகளில் அதிகமானதாக இருந்தது. தற்போது இதைவிட 4 மாநிலங்களில் ஏற்பட்டு இருக்கும் பணவீக்கம் அந்தந்த மாநிலங்களில் உள்ள வீடுகளில் மாதாந்திர மற்றும் தினசரி பட்ஜெட்டையே பதம் பார்த்து இருக்கிறது.
உணவு, எரிபொருள் விலையே காரணம்
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம், நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கத்தை அளவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேசியளவில் 7.8 சதவீதமாக பணிவீக்கம் அதிகரித்துள்ளது. இதில் சில மாநிலங்களில் உக்ரைனில் நடந்துவந்த போரால் விலையேற்றங்களை சந்தித்தன.
அரியானா, தெலுங்கானா
மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக அரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுபவை என பட்டியலிடப்பட்டு உள்ளது. 9 சதவீத பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள இந்திய மாநிலங்களில் இவ்விரண்டும் வருகின்றன. 7 மாநிலங்களில் 8 சதவீதம் பண வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
கிராம பொருளாதாரம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார அறிஞர் டி.கே.ஜோஷி, "கிராமபுற பொருளாதாரத்தை அதிகம் சார்ந்து இருக்கக்கூடிய மாநிலங்களில் இதில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல் மாநில வாரியாக பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு மாறுபடுவதால் இந்த வேறுபாடு காணப்படுகிறது." என்றார்.
மாத பட்ஜெட்டில் 20% கூடுதல் செலவு
உயர்ந்து வரும் பண வீக்கம் காரணமாக மளிகை, மீன், கறி, காய்கள், எரிபொருள், பள்ளி கட்டணம் போன்றவற்றுக்காக மாதந்தோறும் ஒதுக்கும் தொகை கடந்த ஓராண்டில் மட்டும் 20% அதிகரித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தங்கள் மாதாந்திர கணக்கு வழக்கில் கூடுதல் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தமிழ்நாடு, கேரளாவில் குறைவு
ஏழைகள், நடுத்தர மக்கள் மட்டுமின்றி உயர் நடுத்தர மக்கள், பணக்காரர்களும் இதனால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இப்படி நாட்டையே அச்சுறுத்தும் இந்த பணவீக்கத்தில் 2 மாநிலங்கள் மிகக்குறைந்த அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று தமிழ்நாடு மற்றொன்று கேரளா. 2 மாநிலங்களிலும் தேசிய சராசரியை விட குறைவாக முறையே 5.4 மற்றும் 5.1 என்ற அளவில் பணவீக்கம் பாதித்து இருக்கிறது.