பிப்ரவரி 6-க்குள் கொரோனா அலை உச்சம் பெறும்.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கு.. சென்னை ஐஐடி ஆய்வு
டெல்லி: நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் அலை பிப்ரவரி 6-ம் தேதிக்குள் உச்சத்தை எட்டும் என்று சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
ஓமிக்ரானை தடுக்கும் வகையில் நமது நாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது.
பிப்ரவரி 6-ம் தேதிக்குள் உச்சம்
இதன் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் சென்று வருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் கொரோனா உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போதைய கொரோனா அலை பிப்ரவரி 6-ம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
R-மதிப்பு குறைவது குட் நியூஸ்
கொரோனா எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதைக் காட்டும் இந்தியாவின் R-மதிப்பு, ஜனவரி 14 முதல் 21 வரையிலான வாரத்தில் மேலும் 1.57 ஆகக் குறைந்துள்ளது என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி முதற்கட்ட ஆய்வின்படி நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் தற்போதைய அலை அடுத்த 14 நாட்களில், பிப்ரவரி 6-ம் தேதிக்குள் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
R-மதிப்பு என்பது என்ன?
R-மதிப்பு என்பது ஒரு பாதிக்கப்பட்ட நபர் வைரஸைப் பரப்பக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை குறிப்பது ஆகும். இந்தியாவில் கொரோனா அலை பிப்ரவரி மாதம் உச்சத்தை எட்டினாலும், ஆர் மதிப்பு குறைந்து வருவதால் கொரோனா படிப்படியாக குறையும் என்ற நல்ல செய்தியையும் ஆய்வு முடிவு காட்டுகிறது ஆர்-மதிப்பு ஜனவரி 14 மற்றும் ஜனவரி 21 க்கு இடையில் 1.57 ஆகவும், ஜனவரி 7-13 வாரத்தில் 2.2 ஆகவும், ஜனவரி 1-6 முதல் 4 ஆகவும், கடந்த ஆண்டு டிசம்பர் 25- 31 முதல் 2.9 ஆகவும் பதிவாகி இருந்தது. சென்னையின் ஆர்-மதிப்பு 1.2 ஆகவும், மும்பை 0.67 ஆகவும், டெல்லி 0.98 ஆகவும், கொல்கத்தாவின் மதிப்பு 0.56 ஆகவும் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கின்றன.
சென்னைக்கும் மகிழ்ச்சி செய்தி
இந்த மதிப்பு 1க்குக் கீழே குறைந்தால், தொற்றுநோய் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. மும்பை மற்றும் கொல்கத்தாவின் R-மதிப்பு அங்கு உச்சத்தை தாண்டியதையும், டெல்லி மற்றும் சென்னைக்கு இன்னும் 1-ஐ நெருங்கி வருவதையும் குறிக்கிறது என்று ஐஐடி மெட்ராஸின் கணிதவியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜெயந்த் ஜா தெரிவித்தார்.