முத்தலாக் செய்வது கிரிமினல் குற்றம்.. ஜாமீனில் வெளியே வரலாம்.. சட்டம் சொல்வது என்ன?
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்டம் ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளது. எனவே, முத்தலாக் செய்வது கிரிமினல் குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. அதே நேரம், இது ஜாமீனில் வெளிவரும் குற்றச் செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இருமுறை, மோடி அரசு, இந்த சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்து முடியாத நிலையில், மூன்றாவது முயற்சியாக ராஜ்யசபாவில் நேற்று இந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டது.
காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி மற்றும் ஒரு சில கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. அதிமுக வெளிநடப்பு செய்தது, மறைமுகமாக, இந்த சட்டம் நிறைவேற ஆதரவு அளித்தது.
விப் உத்தரவு இல்லை
கடந்த வாரம் லோக்சபாவில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாலில் நேற்று 99 வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 84 வாக்குகளிலும் கிடைத்தன. எனவே, 15 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல், திமுக, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பி.டி.பி, ஆர்.ஜே.டி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், இந்த மசோதாவை எதிர்த்தன. காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் விப் உத்தரவு பிறப்பிக்காததால், அக்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் வாக்களிக்கும் போது சபையில் இல்லை. இதுவும் அரசுக்கு சாதகமாக மாறியது.
வக்கீல் கட்டணம்
எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசுகையில், "அரசின் இந்த செயல்பாடு அரசியல் நோக்கம் கொண்டதாக உள்ளது. குற்றவியல் பிரிவு மற்றும் வேறு சில விதிமுறைகள் காரணமாக மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். மற்றபடி பெண் விடுதலை கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. முத்தலாக் சட்டம் சிறுபான்மையினர் தங்களுக்குள் சண்டையிட வழிவகுக்கும். கணவன்-மனைவி இருவரும் வக்கீல்களுக்கு கட்டணம் செலுத்தியே திவாலாகிவிடுவார்கள்" என்றார்.
வழக்குகள்
முன்னதாக, முத்தலாக் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த, சட்டத் துறை, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதிகரிதது வரும் தலாக் வழக்குகள் குறித்து அரசு கவலைப்படுகிறது. உச்சநீதிமன்ற தடைக்கு பிறகும், இப்படியான தலாக்குகள் குறையவில்லை. மக்கள் நேர்மறையான முன்முயற்சியை ஆதரிக்கிறார்கள். ஆனால், முஸ்லீம் பெண்களின் உரிமைகளை எதிர்க்கட்சிகள் மனதில் நிறுத்த வேண்டுமே தவிர, அரசியலால் உந்தப்பட்டு எதிர்க்க கூடாது என்று தெரிவித்தார். பல முஸ்லீம் நாடுகள் இதுபோன்ற உடனடி தலாக் நடைமுறையை தடை செய்துள்ளன என்றும், ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மாற்றம்
தலாக் செய்வதை, ஒரு குற்றமாகக் கருதும் சட்டப் பிரிவு இந்த மசோதாவிலும் அப்படியே உள்ளது. சில கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்த முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும் - ஆனால், ஜாமீனில் வெளி வரக்கூடிய குற்றமாக அது மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தோடு புதிய மசோதா நிறைவேறியுள்ளது.