குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு!
டெல்லி: ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரரான குல்புஷன் ஜாதவ் கடந்த 2016ம் ஆண்டு ஈரான் நாட்டுக்கு சென்றபோது பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஒரு இந்திய உளவாளி என பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் ஏப்ரல் மாதத்தில் உளவு பார்த்தல், தீவிரவாதம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தானிய ராணுவ நீதிமன்றம் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது.
பாகிஸ்தானின் இந்த அராஜகப் போக்கிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. குல்புஷன் ஜாதவை நேரில் சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி அளிக்கும்படி இந்தியா தரப்பில் பலமுறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்கவில்லை. இதனால் இந்திய அரசு பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியன்று நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள ஐநாவின் சர்வதேச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்புஷன் ஜாதவை தூக்கிலிட கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தடைவிதித்தது. மேலும் இந்த வழக்கு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 18ம் தேதி முதல் சர்வதேச நீதிமன்றம் 4 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியது. அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது வாதங்களை முன்வைத்தன.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தில் இருந்தது. அப்போது, நடைபெற்ற விசாரணையின்போது பாகிஸ்தானில் இயங்கும் ராணுவ நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து இந்திய தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கேள்வியெழுப்பினார்.
மேலும், கட்டாய வாக்குமூலத்தின் அடிப்படையில் குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். விசாரணையின் இறுதிநாள் அன்று பாகிஸ்தான் தரப்பு வழக்கறிஞர் கவர் குரேஷ், "தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்" என்று வாதிட்டார்.
சர்வதேச நீதிமன்றம் ( International Court Of Justice)
ஐ.நா. சபையால் கடந்த 1945ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சர்வதேச நீதிமன்றம் கடந்த 1946ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. ஐ.நா. சபையில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விதிமுறைப்படிதான் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை, இந்திய அரசின் முறையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹேக்கில் உள்ள அமைதி அரண்மனையில் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) பொது அமர்வு நடைபெறும். அப்போது நீதிபதி அப்துல்லாவி அகமது யூசுப் தீர்ப்பை வாசிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.