இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம்
டெல்லி: இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று விமர்சனம் செய்து, 2 சர்வதேச பத்திரிகை சங்கங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.
"ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் பயம் இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவரை வலியுறுத்தியுள்ளனர்.
ஆஸ்திரியாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை நிறுவனம் (ஐபிஐ) மற்றும் மற்றொரு ஐரோப்பிய நாடான, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ஐஎஃப்ஜே) ஆகியவை மோடிக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளன.
தேசத் துரோக சட்டங்கள்
ஊடகவியலாளர்கள் பணி தொடர்பான அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடுங்கள். பத்திரிக்கையாளர்கள் தங்கள் பணியை செய்ததற்காக, தேசத்துரோக சட்டங்கள் பாய்ச்சப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய் பரவிய பின்னர் ஊடகவியலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அரசின் குறைபாட்டை அம்பலப்படுத்தியவர்களை ஒடுக்க கொரோனா காலம் பயன்படுத்தப்படுகிறது.
தேசத் துரோகம் பொருந்தாது
சுதந்திரமான மற்றும் விமர்சன ஊடகவியலாளர்களை துன்புறுத்துவதற்கு தேசத்துரோக சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. இது சர்வதேச கடமைகளை இந்தியா மீறுவதற்கு ஒப்பாகும். எந்தவொரு விமர்சனத்தையும் மவுனமாக்குவதற்கான அரசின் முயற்சிதான் இது. பத்திரிகை வேலையை தேசத்துரோகம் என்ற பிரிவின்கீழ் கொண்டு சென்று உட்படுத்துவதும், நாட்டின் பாதுகாப்புக்கே ஊறு என கூறுவதற்கும் முகாந்திரமே கிடையாது.
55 பத்திரிக்கையாளர்கள்
மார்ச் 25ம் தேதி முதல் இதுவரை, கொரோனா காலத்தில், 55 பத்திரிக்கையாளர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஆஆர்ஏஜி குரூப் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கண்டனம்
இதனிடையே இந்திய எடிட்டர்கள் கில்ட் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பத்திரிக்கையாளர் அஹான் பென்கர் மீது டெல்லி காவல்துறை கடுமையாக தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரவன் இதழில் பணியாற்றும் இந்த இதழாளர் மீது பணியை செய்து கொண்டிருந்தபோது காவல்துறை தாக்கியுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.