சர்வதேச யோகா தினம்... பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொண்டாட உத்தரவு
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார்.
2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு, ராஞ்சியில் நடக்கும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்ய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு யோகா தினத்தை கொண்டாட கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு சில உத்தரவுகளை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து, அறிவுறுத்தி வருகிறார்.