International Yoga Day : 'நோய்நாடி நோய்முதல் நாடி' திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி
டெல்லி: சர்வதேச யோகா தின உரையில் பிரதமர் மோடி, 'நோய்நாடி நோய்முதல் நாடி' திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
7-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சிறப்புரையாற்றினார்.
International Yoga Day: கொரோனா காலத்தில் உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா- பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் யோகா என்பது நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என்றார். மேலும் அனைத்து மொழிகளிலும் யோகா பயிற்சி தரக் கூடிய வீடியோக்கள் கொண்ட மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த உரையின் போது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள்: 948)
என்ற திருக்குறளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
இந்த குறளுக்கு டாக்டர் மு. வரதராசனார், நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்). என்று விளக்க உரை எழுதி உள்ளார்.