இனி எங்க இருந்தாலும் ஆப்புதான்.. நீரவ் மோடியின் சகோதரருக்கு.. இன்டர் போல் ரெட் கார்னர் நோட்டீஸ்
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 578 கோடி மோசடி செய்துவிட்டு எஸ்கேப் ஆன நீரவ் மோடியின் சகோதரர் நேஹலுக்கு இன்டர்போல் போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.
நாட்டின் முக்கியமான பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் மோசடி செய்து கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் நீரவ் மோடி. அப்போது அவருடன் அவரது சகோதரர் நேஹால் தீபக் மோடி மற்றும் மாமா மெகுல் சோக்ஷி ஆகியோரும் தப்பியோடிவிட்டனர்.
நீண்ட நாள் தலைமறைவாக இருந்த நீரவ் மோடி இங்கிலாந்து நாட்டின் லண்டனில் வசிப்பது தெரியவந்தது. அதன்பிறகு அவரை கைது செய்த லண்டன் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தப்பியோடிய மூன்று பேரையும் இந்தியாவுக்கு கொண்டுவர அமலாக்கத்துறை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று இண்டர்போல் அமைப்பு நேஹல் தீபக் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், எந்த நாட்டில் இருந்தாலும் நேஹல் தீபக் மோடியை கைது செய்ய இயலும்.
பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை வைத்திருக்கும் நேஹல் தீபக் மோடி தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்து வருகிறார். அவரை சர்வதேச போலீசார் இனி கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.