பங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் ரூ 3.6. லட்சம் கோடி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்
டெல்லி: மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது மும்பை பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ 3.6 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர்.
2020-2021-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.
அதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 987.96 புள்ளிகள் குறைந்து 39,735.53 புள்ளிகளாக இருந்தது. அது போல் நிஃப்டியில் 11,700 புள்ளிகளாக இருந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி சரிந்த 1,070.63 புள்ளிகளை காட்டிலும் மிகப் பெரிய சரிவாகும்.
இது 4 ஆவது முறையாக ஏற்பட்ட மிகப் பெரும் சரிவாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அது போல் தேசிய பங்கு சந்தையில் 300.25 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 11,661.85 ஆக குறைந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மும்பை பங்குச் சந்தை -2.43 சதவீதமும் தேசிய பங்கு சந்தை -2.51 சதவீதமும் சரிவை கண்டது.
வருமான வரி விகிதத்தில் பெரும் மாற்றம்.. ஆனால் ஒரு கன்டிஷன்.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
இதற்கு முக்கிய காரணங்களாக பட்ஜெட்டில் முக்கிய துறை சார்ந்த திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாததே ஆகும் என கூறப்படுகிறது. வருமான வரி விதிப்பில் புதிய முறையை அறிவித்துள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். அது போல் ரியல் எஸ்டேட், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் எதிர்பார்க்கப்பட்ட சலுகை ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சுருக்கமாக சொல்ல போனால் 1.53 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.4 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.