நெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ப சிதம்பரம் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம் மட்டுமின்றி கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உட்பட 14 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ப சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். சுமார் 60 நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில் ப சிதம்பரம் மீது : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிக்கை
அந்த குற்றப்பத்திரிக்கையில் ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உட்பட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மீது 60 வது நாளுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அவர் ஜாமினில் வெளியே வரலாம் என்பது விதி.
நெருங்கிய 60வது நாள்
எனவே தற்போது 60வது நாளை நெருங்கும் நிலையில் ப சிதம்பரத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். இந்த குற்றப்பத்திரிக்கையின் மீதான விசாரணை வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது.
ப சிதம்பரம் கைது
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப சிதம்பரத்தை கைது செய்தது. தொடர்ந்து அவரிடம் சிறைக்கே சென்று விசாரணை நடத்தியது.
நெருக்கடி
இதன் காரணமாக ப சிதம்பரத்திற்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் தான் சிறையில் இருந்து வெளியே வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுவரை ப சிதம்பரம் விசாரணைக் கைதியாக டெல்லி திகார்சிறையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கொலை வழக்கில் சிறையில் உள்ள ஐஎன்எக்ஸ் மீடியா இந்திராணி முகர்ஜி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் தான் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.