ஐ.என்.எக்ஸ்.வழக்கு: ப. சிதம்பரத்துக்கு அக்.17 வரை சிறை! ஜாமீன் மனு மீது நாளை சுப்ரீம்கோர்ட் விசாரணை?
டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமது ஜாமீன் மனு மீது நாளையே விசாரணை நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுகளை பெற அனுமதி கொடுத்ததில் முறைகேடு நடந்தது என்பது சிபிஐ தொடர்ந்த வழக்கு. இவ்வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது நாளையே விசாரணை நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி. ரமணாவிடம் இன்று அவரது வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த வாரம் முதல் நீண்டவிடுப்பு வருவதால் நாளையே ஜாமீன் மனுவை விசாரிக்க ப.சிதம்பரம் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது எப்போது விசாரணை என்பதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்தான் முடிவு செய்வார் என நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.
சிறைக் காவல்நீட்டிப்பு
இதனிடையே ப.சிதம்பரத்துக்கான நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அவரது சிறைக் காவலை வரும் 17-ந் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.