ப.சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு..எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.. 20 நிமிடத்திற்கு பின் டிஸ்சார்ஜ்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் மருத்துவ சோதனையை தொடர்ந்து 20 நிமிடத்திற்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.
இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிக்கி உள்ளார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டு தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 15 நாள் விசாரணைக்கு பிறகு, ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இவரின் ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை தொடர்ந்து விசாரித்து வந்தது.
திகார் சிறையில் வைத்து ப. சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை தற்போது அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ப. சிதம்பரம் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்தே போதே உடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இவர் மேலும் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன்பின் மருத்துவ சோதனையை தொடர்ந்து 20 நிமிடத்திற்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.