ப. சிதம்பரம் ஜாமீன் வழக்கு.. டெல்லி ஹைகோர்ட் உத்தரவில் பிழை எதுவும் இல்லை.. நீதிபதி அதிரடி!
ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கிய உத்தரவில் பிழை எதுவும் இல்லை என்று டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கிய உத்தரவில் பிழை எதுவும் இல்லை, அதில் பிழை திருத்தம் செய்ய வேண்டியது இல்லை என்று டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். இவர் மீது வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக புகார் உள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் இந்த வழக்கில் விசாரித்து வருகிறது. சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் இவரால் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற முடியவில்லை.
அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்து விட்டது. டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கிய உத்தரவில் பிழை இருப்பதாக அமலாக்கத்துறை கூறியது. உத்தரவு ஆணையில் பிழை உள்ளது என்று சிசிடிவி ஆதாரங்கள் தொடர்பான சில வாக்கியங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டு இருந்தது. இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் அமலாக்கத்துறை திருத்தம் செய்ய கோரிக்கை வைத்தது.
ஆனால் இதற்கு ப. சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதன்படி ப. சிதம்பரம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தயான் கிருஷ்னன், அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கும் தவறுகள் எதையும் திருத்த கூடாது. அவை எழுத்துப் பிழை என்பதற்காக அவர்கள் அதை திருத்த சொல்லவில்லை. அதன் மூலம் ப. சிதம்பரத்திற்கு எதிராக உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் வாதம் செய்ய அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று கூறினார்.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி சுரேஷ் கெய்த், நான் வழங்கிய உத்தரவில் எந்த தவறும் கிடையாது. உத்தரவின் 36ம் பக்கத்தில் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் அடிப்படையில் வழக்கு விசாரணை நடந்துள்ளதாக குறிப்பிட்டேன். ஆனால் இது எழுத்துப்பிழை. சிசிடிவி தொடர்பான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை.
ஆனால் இது வழக்கிலும், உத்தரவிலும் இது மாற்றம் எதையும் ஏற்படுத்தாது. அதனால் உத்தரவில் எந்த விதமான திருத்தத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்று நீதிபதி சுரேஷ் கெய்த் கூறியுள்ளார்.
முன்னதாக நீதிபதி கெய்த் வேறு ஒரு வழக்கில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் வாசகங்களை வெட்டி இந்த வழக்கின் உத்தரவில் ஒட்டி இருப்பதாகக் புகார் எழுந்துள்ளது. டெல்லி ஹைகோர்ட்டில் கடந்த வருடம் நடந்த வழக்கு ஒன்றின் வாசகங்களை நீதிபதி பயன்படுத்தி உள்ளது. பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோகித் டண்டன் என்பவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் இருந்த சில வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் இதில் இடம்பெற்றுள்ளது.
அதில் இருக்கும் வாசகங்களை அப்படியே வெட்டி நீதிபதி இதில் பயன்படுத்தி உள்ளார். இந்த தவறுக்கு எதிராக உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட உள்ளது.