விடாது விரட்டும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு, மே 15ம் தேதி சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையேற்று இன்று மதியம் 2 மணியளவில் சிதம்பரம் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்.
கடந்த வருடம், டிசம்பர் 19ம் தேதி, சிதம்பரம் இங்கு நேரில் ஆஜராகி, அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார். சுமார் 8 மணி நேரம் அந்த விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், ஜனவரி 7ம் தேதியும் இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்னிலையில் சிதம்பரம் ஆஜரானார். இன்று மீண்டும், சிதம்பரத்திடம் விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.