ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் ஆஜராகியுள்ளார்.
2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு, மே 15ம் தேதி சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையேற்று கடந்த டிசம்பர் 19ம் தேதி, டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜராகி, அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார். சுமார் 8 மணி நேரம் அந்த விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்றும் இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக காலை 11.15 மணிக்கு, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சிதம்பரம் வருகை தந்தார்.
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள், ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 15ம் தேதிவரை விலக்கு அளித்து, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.