திகார் சிறை போதும்.. ஜாமீன் மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்.. நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை!
திஹார் சிறை காவலுக்கு எதிராக ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.
Recommended Video
டெல்லி: திஹார் சிறை காவலுக்கு எதிராக ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை டெல்லி ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.
கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 40க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரம் வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்தனர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் சிபிஐ வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு என்று அனைத்தையும் சேர்த்து உச்ச நீதிமன்றம், டெல்லி ஹைகோர்ட் இரண்டிலும் ப. சிதம்பரம் மொத்தம் மூன்று மனுக்களை தாக்கல் செய்தார்.
இதில் அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேபோல் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிபிஐ மூலம் அவர் 15 நாட்கள் விசாரிக்கப்பட்டார்.
இந்த சிபிஐ காவல் கடந்த செப்டம்பர் 5ம் தேதி முடிந்தது. இதையடுத்து சிபிஐ காவல் கூடாது, உடனே பெயில் வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு சிபிஐ காவலை மேலும் நீட்டிக்காமல் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதி அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் காவல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திஹார் சிறை தண்டனை இந்த மாதம் 19ம் தேதியோடு முடிகிறது.
இந்த நிலையில் இந்த திஹார் சிறை காவலுக்கு எதிராக ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். டெல்லி ஹைகோர்ட்டில் இவர் இதற்காக மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை டெல்லி ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.
நாளை காலை இந்த மனு மீதான விசாரணையும், சிபிஐ காவலுக்கு எதிரான (சிபிஐ காவல் விதிக்கப்பட்டதே தவறு என்று மனு) மனு மீதான விசாரணையும் ஒன்றாக டெல்லி ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.