ஐஎன்எக்ஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை வரை காவலை நீட்டிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.
இதில் நிறைய பண மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில்தான் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார்.
சிபிஐ நீதிமன்றம் இவருக்கு இரண்டு முறை பெயில் வழங்க மறுத்தது. டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப. சிதம்பரத்தை முதலில் ஐந்து நாள், அதன்பின் ஐந்து நாள் என்று மொத்தம் 10 நாட்கள் காவலில் எடுக்க உத்தரவு பிறப்பித்தது.
ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட காவல் இன்றோடு முடிகிறது. அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 5ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது. செப்டம்பர் 5ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.
அதே சமயம் இன்று சிபிஐ வழக்கில் விசாரணை நடந்தது. இதற்காக ப. சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார், இந்த வழக்கில் ப. சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. ஆனால் நீதிபதி அஜய் குமார், உங்கள் கோரிக்கை வலுவாக இல்லை. காவலில் எடுக்க என்ன காரணம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார்.
சிபிஐயின் ஐந்து நாள் காவல் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து ப. சிதம்பரம் தரப்பு தாமாக முன் வந்து திங்கள் வரை ப. சிதம்பரம் காவலில் இருப்பதில் பிரச்சனை இல்லை.சிபிஐ காவலுக்கு எதிராக விசாரணை திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. அதுவரை ப.சிதம்பரம் காவலில் இருப்பதில் பிரச்சனை இல்லை.
அதில் தீர்ப்பு வரும் வரை நாங்கள் காத்து இருக்கிறோம். ஆனால் சிபிஐ காவல் என்பது முறையற்றதுதான், என்றது. இந்த கோரிக்கை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை வரை காவலை நீட்டிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.