ஜிடிபி, பொருளாதார சரிவு.. நாளை ராஜ்யசபா வரும் ப. சிதம்பரம்.. பேசுவதற்கு நீண்ட லிஸ்ட் ரெடி!
திகார் சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நாளை ராஜ்யசபா கூட்டத் தொடரில் கலந்து கொள்ள இருக்கிறார்.
டெல்லி: திகார் சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நாளை ராஜ்யசபா கூட்டத் தொடரில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இன்று ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வருகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 106 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வருகிறார்.
கட்டுப்பாடுகள்.. சம்பிரதாயங்கள்.. திகார் சிறையிலிருந்து ப. சிதம்பரம் எப்படி விடுதலை செய்யப்படுவார்?
என்ன செய்வார்
இன்று மாலை ப.சிதம்பரம் ஜெயிலில் இருந்து டெல்லியில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார். பின் அங்கிருந்து அப்படியே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்திக்கிறார். பின் தன்னுடைய வழக்கறிஞர்களை சந்தித்து சில முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார்.
கருத்து சொன்னார்
இந்த நிலையில் தனது அப்பா ஜெயிலில் இருந்து வெளியே வந்தது குறித்து ப. சிதம்பரத்தின் மகன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், எனது அப்பா மீண்டும் வந்தது சந்தோசம் அளிக்கிறது. அவர் செய்யாத தவறுக்காக இத்தனை நாட்கள் சிறையில் இருந்தார்.
சீக்கிரம்
விரைவில் அவர் மொத்தமாக இந்த வழக்கில் இருந்தே விடுபடுவார். அவர் வீட்டிற்கு வந்தது பெரிய திருப்தி அளிக்கிறது. நாளை நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா கூட்டத் தொடரில் கலந்து கொள்வார். நாளை அவையில் அவர் பேசுவார், என்று கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
நாளை கார்த்தி சிதம்பரம் ராஜ்யசபாவில் என்ன பேசுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் பெரும்பாலும் ஜிடிபி குறித்தும், பொருளாதார பாதிப்பு குறித்தும் அவையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை அவை பெரிய அளவில் பரபரப்பாக இருக்க போகிறது.