ஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரம் ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்.
ஆனால் உடனடியாக அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
ஆனாலும் இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்து வருகிறது. கடைசியாக நவம்பர் 14ம் தேதி இந்த வழக்கில் டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்தது. டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார்.
இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது. இந்த ஜாமீன் மேல்முறையீடு மீதான விசாரணை இன்று காலை நடந்தது.
அதேபோல் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் தனது தீர்ப்பில் அப்படியே அமலாக்கத்துறை வாசகத்தை பயன்படுத்தி இருக்கிறார். இன்னொரு பக்கம் நீதிபதி கைத் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் வாசகங்களை வெட்டி இதில் ஒட்டி இருப்பதாகக் புகார் எழுந்துள்ளது.பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோகித் டண்டன் என்பவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் இருந்த சில வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் இதில் இடம்பெற்றுள்ளது.
தீர்ப்பில் இருக்கும் இந்த தவறையும் தன்னுடைய உடல் நலத்தையும் சுட்டி காட்டி ப. சிதம்பரம் ஜாமீன் கோரியது. இந்த நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது .
அதில் ப. சிதம்பரத்திடம் எவ்வளவு விசாரணை செய்யப்பட்டுள்ளது, அவருக்கு எதிராக எவ்வளவு ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளது. சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் என்ன தவறு என்று உச்ச நீதிமன்றம் கேட்டது.
மேலும் ப. சிதம்பரத்தின் ஜாமீனை எதிர்க்க என்ன காரணம் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் 6 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை 26ம் தேதி நடக்க உள்ளது.