8 கிலோ மட்டுமா குறைந்தது.. பொருளாதாரமே சரிந்தது.. ப.சி சிறையில் இருந்த 106 நாட்கள் என்ன நடந்தது?
ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்த 106 நாட்களில் இந்திய பொருளாதாரத்திலும் அவரின் உடல் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டது.
Recommended Video
சென்னை: ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்த 106 நாட்களில் இந்திய பொருளாதாரத்திலும் அவரின் உடல் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டது.
ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் எகிறி குதித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். அப்போது கைதானவர் இன்றுதான் விடுதலை ஆகிறார்.
உச்ச நீதிமன்றம் ப. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவில் இந்த நிபந்தனை ஜாமீனை அளித்துள்ளது.உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அன்று கபில் சிபல் வைத்த வாதம்.. உடனே ஏற்ற நீதிபதிகள்.. ப. சிதம்பரத்திற்கு எப்படி பெயில் கிடைத்தது?
என்ன சரிவு
இவர் சிறையில் இருந்த காலத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்தது. ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறையில் பலர் இதனால் பணியை இழக்கும் நிலை ஏற்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கில் பலர் வேலையை இழந்தனர். இதனால் ஐடி துறையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடுமையான பாதிப்பு
ப. சிதம்பரம் சிறைக்கு சென்று சில நாட்களில்தான் இந்த பொருளாதார சீர்கேட்டை சரி செய்ய மத்திய பாஜக அரசு நிறைய திட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டது. மிக முக்கியமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்தது. ஜிஎஸ்டியில் பெரிய அளவில் வரி குறைக்க வேண்டும் என்று ஐடியா கொடுத்தவரே ப. சிதம்பரம்தான்.
வரி மாற்றம்
அதேபோல் இவர் சிறையில் இருந்த போதுதான் கார்ப்பரேட் வரியை மத்திய பாஜக அரசு குறைத்தது. ஆனால் இதுவும் கார்ப்பரேட் பணி நீக்கத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், அந்த துறையிலும் வரி குறைக்கப்பட்டது.
ஆர்பிஐ பணம்
ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சரியாக 6 நாட்கள் கழித்துதான் ஆர்பிஐ அமைப்பிடம் மத்திய அரசு பணம் வாங்கியது. மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.
என்ன எதிர்ப்பு
தொடர் பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் இந்த பணம் பெறப்பட்டது.மத்திய அரசின் இந்த முடிவை தொடர்ந்து எதிர்த்து வந்தவர்தான் ப. சிதம்பரம். கடைசியில் அவர் உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும் முன் அந்த பணத்தை மத்திய அரசு வாங்கி செலவு செய்துள்ளது.
இன்னொரு பக்கம் எப்படி
இன்னொரு பக்கம் மிக முக்கியமாக அவர் உள்ளே இருந்த 100 நாட்களில் இரண்டு காலாண்டு ஜிடிபி குறித்த அறிவிப்பும் வெளியானது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.
கிண்டல் செய்தார்
முதல் காலாண்டிற்கான ஜிடிபி 5% ஆக குறைந்தது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. இதை ப. சிதம்பரம் நீதிமன்றத்திலேயே வைத்து கலாய்த்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ப. சிதம்பரம் உடல் ரீதியாகவும் நிறைய மாற்றங்களை சந்தித்தார்.
எடை குறைந்தது
அவர் சிறைக்கு சென்ற போது அவரின் எடை 73 கிலோவாக இருந்தது. தற்போது 73 கிலோவில் இருந்து அவரின் எடை 65 கிலோவாக குறைந்துவிட்டது. சிறையில் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இது குரோன்ஸ் நோய் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனால் வயிற்றில் அலர்ஜி ஏற்பட்டு புண்கள் ஏற்பட்டுள்ளது.
சாப்பாடு
இப்போதும் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. உடல் நலம் குன்றி, மிகவும் மெலிந்த தேகத்துடன் அவர் இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார். இனி அவரின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.