துரத்திக்கிட்டே இருப்பாங்க.. இதுதான் ஒரே வழி.. ப. சிதம்பரத்தின் கைதுக்கு பின் இப்படி ஒரு காரணமா?
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்ததும், அதற்கு பின் கைதானதும் ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்ததும், அதற்கு பின் கைதானதும் ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு முக்கிய விஷயங்களை மனதில் வைத்துதான் ப. சிதம்பரம் அவரின் வீட்டிற்கு சென்றார், கைது செய்யப்படுவோம் என்று தெரிந்துதான் அவர் இப்படி செய்தார் என்று கூறுகிறார்கள்.
பெரும் பரபரப்பிற்கு பின் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.
இன்று காலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில்தான் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நடைபெற்று வருகிறது.
என்ன தேடல்
இந்த வழக்கில் முதலில் சிபிஐ ப. சிதம்பரத்தை தேடிக்கொண்டு இருந்தது. நேற்று முதல்நாள் மாலை 6.30 மணிக்கு காணாமல் போன ப. சிதம்பரத்தை சிபிஐ தீவிரமாக தேடியது. அதே சமயம் அவரின் முன் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன் ஜாமீன்
வெள்ளிக்கிழமைதான் இவரின் முன் ஜாமீன் மனுவை விசாரிப்போம் என்று நீதிமன்ற பதிவாளர் கூறிவிட்டார். இதனால் ப. சிதம்பரம் தலைமறைவாக இருந்தது அவருக்கு பெரிய சிக்கலாகி போனது. ஏன் என்றால் ஒருவேளை ப. சிதம்பரம் கைது செய்யப்படாமல் அவரின் முன்ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டால் அதுவும் சிபிஐக்கு சாதகமாவே இருக்கும்.
சிபிஐ என்ன செய்யும்
ப. சிதம்பரம் தலைமறைவாகிவிட்டார். அவரை 24 மணி நேரமாக பார்க்க முடியவில்லை என்று சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் வாதம் செய்யும். ஜாமீனுக்கு முன்பே தலைமறைவாகும் அவர் ஜாமீன் கிடைத்தால் ஒத்துழைக்கவே மாட்டார். அதனால் அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க கூடாது என்று வாதம் செய்யும்.
வாய்ப்பு இல்லை
ஆகவே அவர் ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான் நேற்று வெளிப்படையாக ப. சிதம்பரம் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் என்று கூறுகிறார்கள். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்துதான் அவர் அப்படி செய்தார் என்கிறார்கள். இதில் கைதாவதுதான் நல்லது என்று அவருக்கு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
புகார் என்ன
ஏனென்றால் இந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் பெயர் எங்கும் நேரடியாக குறிப்பிடவில்லை. அவர் மீது எப்ஐஆர், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எந்த இடத்திலும் ப. சிதம்பரம் தவறு செய்தார் என்று கூறப்படவில்லை.சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் தற்போது விசாரிக்கப்படுகிறார்.
காவலில் எடுக்க வாய்ப்பில்லை
அதேபோல் இந்த வழக்கு விசாரணை நடக்கும் கடந்த 2 வருடங்களில் 10 முறைக்கும் மேல் ப. சிதம்பரம் சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். அவர் எங்கும் ஓடி செல்லவில்லை. ப. சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்க வாய்ப்புள்ளது.
பெயில் கிடைக்கும்
ஆனால் இந்த வழக்கில் நேரடியாக புகார் இல்லாத காரணத்தால் ப. சிதம்பரத்திற்கு கண்டிப்பாக இன்று பெயில் கிடைக்கும் என்கிறார்கள். அதனால் ஒரே ஒரு நாள் இரவு சிபிஐ அலுவலகத்தில் இருப்பதே நல்லது. தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அதுவே உங்கள் பெயிலுக்கு எதிராக வாய்ப்புள்ளது என்று ப. சிதம்பரத்திற்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.
என்ன ஆலோசனை
அதோடு இப்படி தலைமறைவாக இருந்தால் சிபிஐ தொடர்ந்து உங்களை தேடும். சிபிஐ உங்களை எப்படியும் துரத்தி தேடி கைது செய்யும். நீங்களே வெளியே வருவதுதான் வழக்கு விசாரணையின் போது நமக்கு சாதகமாக இருக்கும் என்று கபில் சிபில் உள்ளிட்ட வழக்கறிஞர் குழு அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளது.