ஐஎன்எக்ஸ்.. ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய சுப்ரீட் கோர்ட் தடை.. வழக்கு ஒத்திவைப்பு!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வாதம் நாளை நடக்கும்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த வாரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார். அதோடு ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுக்கவும் அனுமதி வழங்கினார். இவர் கடந்த 5 நாட்களாக கடுமையாக விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ப. சிதம்பரம் சார்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நேற்று 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிபிஐ காவலுக்கு எதிராக முன் ஜாமீன் கோரிய ப. சிதம்பரம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே சமயம் டெல்லி ஹைகோர்ட் உத்தரவின் பெயரில் சிபிஐ ப. சிதம்பரத்தை காவலில் எடுத்ததே தவறு என்று தீர்ப்பளிக்கும் படி கோரிய மனு இன்னும் விசாரணை செய்யப்படவில்லை.
ஆனால் அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான வழக்கில் மட்டும் ப. சிதம்பரத்திற்கு கொஞ்சம் சாதகமான தீர்ப்பு வந்தது. அதாவது இன்று மதியம் 12 மணி வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய கூடாது என்று இடைக்கால முன் ஜாமீன் அளித்தது.
ஆனால் இன்னொரு பக்கம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ப. சிதம்பரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. அங்கு, ப. சிதம்பரத்திற்கு மேலும் ஐந்து நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் (ஆகஸ்ட் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.
தற்போது இதை எதிர்த்து ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தனது காவலை ரத்து செய்து உடனடியாக பெயில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனால் இன்று இரண்டு மனுக்கள் மீது விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடந்தது. அதேபோல் சிபிஐ காவலுக்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு மீதும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் ஏ.எஸ் போபான்னா ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தனர்.
இன்று முழுக்க இந்த வழக்கில் . சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் மட்டுமே வாதம் செய்தனர்.
அதில், கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி தங்களது வாதத்தில், சிதம்பரத்துக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சிதம்பரத்தை விசாரணை செய்தது தொடர்பான விவரங்களை சிபிஐ தரப்பு தாக்கல் செய்யவில்லை. சீலிடப்பட்ட கவரில் ப. சிதம்பரத்திற்கு எதிராக சொல்லப்படும் எதையும் ஆதாரமாக எடுக்க முடியாது.
இதுபோல சீலிடப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்த வழக்குகள் ஏற்கனவே பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ப. சிதம்பரத்திடம் செய்யப்பட்ட விசாரணை குறித்த விவரமோ அறிக்கையோ தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வாதம் மதியம் வரை சென்றது. இந்த வாதத்திற்கு பதில் அளிக்க சிபிஐ தரப்பு கூடுதலாக 24 மணி நேரம் கேட்டது. இதனால் இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள். ப.சிதம்பரம் தரப்பு வைத்த அத்தனை வாதங்களுக்கும் நாளை பதிலளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பு கூறியது.
ஆகவே நாளை மதியம் 2 மணி முதல் வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.