ஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி:ஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை வரும் 28-ம் தேதி நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது பதவியை பயன்படுத்தி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
ராஞ்சி, பூரி ஆகிய இடங்களில் ஐ.ஆர்.சி.டி.சிக்கு சொந்தமான ஹோட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
உடல்நிலை சரியில்லாததால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் லாலு பிரசாத் ஆஜரானார். அவர் இந்த வழக்கில் ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தார்.
இதையடுத்து, அவருக்கு வரும் 28-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ், மனைவி ரப்ரி தேவிக்கும் அதே தேதி வரை ஜாமீனை அவர் நீட்டித்து ஆணையிட்டுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களுக்கு ராஞ்சி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.