ஹோட்டல ரூம் நாங்க போட்றோம்.. நீங்க சட்டத்த மட்டும் விளக்குங்க..ஹேமமாலினிக்கு விவசாயிகள் ஓபன் சேலன்ஞ்
டெல்லி: விவசாய சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஹேம மாலினி கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், அவர் பஞ்சாபிற்கு வந்து விவசாய சட்டங்களால் என்ன நன்மை என்பதை விளக்க வேண்டும் என்றும் இதற்கு ஆகும் மொத்த செலவுகளை தாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 50 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், இதில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மதுரா பாஜக எம்பி ஹேம மாலினி, "உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டங்களை நிறுத்தி வைத்திருப்பது நல்லது. இது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். இத்தனை கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பிறகும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
தூண்டுதலால் போராட்டம்
தங்களுக்கு என்ன வேண்டும், இந்தச் சட்டங்களில் என்னப் பிரச்னை என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. யாரோ ஒருவரின் தூண்டுதலால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்றார். ஹேம மாலினியின் இந்தக் கருக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபிற்குத் தாய்
இது குறித்து விவசாய சங்க தலைவர் பூபிந்தர் சிங் கும்மான் பாஜக எம்பி ஹேம மாலினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "உங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் பஞ்சாப் மைத்துனர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது பஞ்சாப் மக்களுக்கு ஒரு தாயாக இருப்பதற்குச் சமம். இந்த நிலையில், விவாசியகள் போராட்டம் குறித்த நீங்கள் தெரிவித்துள்ள கருத்து அனைத்து பஞ்சாபிகளையும் காயப்படுத்தியுள்ளது.
உரிய விலை வேண்டி போராட்டம்
தலைநகர் டெல்லியில் எங்கள் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் 51 நாளாகத் தொடர்ந்து போராடி வருகிறோம். இதனால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் மிகவும் கஷ்டப்பட்ட தனது பயிர்களை விளைவிக்கிறான். ஆனால், அந்த பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கூட கிடைக்காததால் அவர்கள் மிகக் குறைந்த விலைக்கு அவற்றை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
செலவுகளை நாங்கள் ஏற்கிறோம்
விவசாயிகளுக்கு இந்தச் சட்டம் பற்றி ஒன்றும் தெரியாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் எங்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வாருங்கள். உங்களுக்கான போக்குவரத்து செலவு, இங்கு நீங்கள் தங்கும் 5 ஸ்டார் ஹோட்டலுக்கான செலவு என அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நீங்கள் விவசாய சட்டங்களால் எங்களுக்கு என்ன நன்மை என்பதை மட்டும் விளக்குங்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.