ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்ததன் பின்னணி இதுதானா? எது நடக்கும் முதலில்?
டெல்லி: சமீபத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்து இருந்தார். இவர்களது சந்திப்புக்குப் பின்னணியில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதியுடன் ஓராண்டை மோடி அரசு கடந்துவிட்ட நிலையில், சில அமைச்சர்களை கட்சிப் பணிக்கு அனுப்புவதற்கு பாஜக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜக அரசு 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கட்சிக்குள்ளும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் மட்டும் அமைச்சரவைக்குள் கொண்டு வரப்பட்டனர். பெரிய மாற்றங்களை செய்யாததற்கு காரணம் பிரபலமான முகங்கள் கட்சியில் குறைவாக இருந்ததுதான். 2014ல் பாஜக தேசிய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னரும் கட்சியில் பெரிய மாற்றங்களை செய்யவில்லை.
ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ், மத்தியப்பிரதேச அமைச்சராக இருந்த கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோரை கட்சியின் பொதுச் செயலாளராக அமித் ஷா தேர்வு செய்தார். மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கும், கைலாஷூக்கும் ஒத்துப் போகாததால், டெல்லிக்கு கைலாஷை அமித் ஷா அழைத்துக் கொண்டார். இவர்களைத் தொடர்ந்து மேற்குவங்க பாஜக தலைவராக ராகுல் சின்ஹாவை அமித் ஷா தேர்வு செய்தார். பின்னர் மத்திய பாஜகவின் செயலாளராக ராகுலை அமித் ஷா கொண்டு வந்தார். திரிபுராவில் பாஜக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த சுனில் தியோதராவையும் செயலாளர் பதவியில் அமர்த்தினார். இதன் பின்னர் பெரிய மாற்றங்களை தேசிய அளவில் அமித் ஷா செய்யவில்லை.
இதையடுத்து 2013ல் பாஜக முதல்வர்களாக இருந்த மூன்று முதல்வர்களான சிவராஜ்சிங் சவுகான், வசுந்தர ராஜே சிந்தியா, ராமன் சிங் ஆகியோரையும் கட்சியின் துணைத் தலைவர்களாக தேர்வு செய்து இருந்தார். இவர்களில் சிந்தியா மற்றும் ராமன் சிங் இருவரும் தற்போது முதல்வர்களாக இல்லை.
காஷ்மீரில் பாஜக தலைவர், அவரது தந்தை, சகோதரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை.. பாதுகாவலர்கள் கைது
கட்சியின் தலைவராக அமித் ஷா இருந்தபோது பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தேசிய அளவில் அதிக உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தார். மத்தியிலும் 2014ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு அமித் ஷாவின் பங்கு பெரிய அளவில் இருந்ததால், அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பின்னர் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் தலைவராக இருந்தபோது, பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்தது, மத்தியிலும் மீண்டும் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த பின்னணியில் நடப்பு பாஜக அரசில் அவருக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவருக்குப் பின்னர் ஜே.பி. நட்டா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரின் தலைமையில் கட்சிக்குள் விரல் விட்டும் எண்ணும் அளவிற்கே கட்சியின் பழைய தலைவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைவராக இருக்கும் பி.எல். சந்தோஷ்க்கு தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பை அமித் ஷா வழங்கி இருந்தார். தற்போது கட்சியிலும், அமைச்சரவையிலும் மாற்றம் கொண்டு வந்து மீண்டும் புத்துணர்வு கொடுக்க வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது. ஆதலால்தான், ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கட்சியில் அல்லது அமைச்சரவையில் மோடி, அமித் ஷா கூட்டணி மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனால், முதலில் எது இருக்கும் என்பது சூழலைப் பொருத்தது.