உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு... 2 ஆண்டில் செய்தது என்ன?
Recommended Video
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்த போது நினைத்தது நடந்ததா என்று தெரியவில்லை ஆனால் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தைரியமான முடிவு என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.
உயர் ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் ஆயிரம் மதிப்பிழப்பதாக கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
கையில் 500, ஆயிரங்கள் இருந்தா போதும் அவை செல்லாமல் போனது, சில்லறை கிடைக்கவில்லை,ஏடிஎம் சென்றால் நாள் முழுக்க காத்திருந்து பணம் எடுக்கும் அவலம், பின்னர் பணம் எடுக்க கட்டுப்பாடு என்று மக்கள் மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் அல்லோலப்பட்டனர். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது எந்த அளவிற்கு கைகொடுத்திருக்கிறது என்பது இன்றும் விவாதிக்கப்பட்டே வருகிறது. சாமானிய மக்கள் மத்தியில் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது என்ற கேள்வியும் இதில் மறைந்தே இருக்கிறது.
பணமதிப்பிழப்பின் முக்கிய நோக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை 3 அம்சங்களை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டது ஒன்று கருப்புப்பணத்தை ஒழிப்பது மற்றொன்று போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அடியோடு ஒழிப்பது மற்றும் தீவிரவாத அமைப்புகளின் நிதி பரிவர்த்தனையை முடக்குவது. இவற்றை தவிர மக்கள் மத்தியில் டிஜிட்டல் இந்தியாவை புகுத்துவது இதன் மூலம் மக்களை வரிவிளிம்பிற்குள் கொண்டு வர முடியும் என்பதும் திட்டம்.
எதிர்பார்த்தது நடைபெறவில்லை
நவம்பர் 8, 2016ல் உயர் மதிப்புடைய நோட்டுகள் தடை செய்யப்பட்ட போது அதன் மதிப்பு 15,417.93 பில்லியன் இவற்றில் ரூ. 15,310.73 பில்லியன் பணம் திரும்ப வந்தடைந்துள்ளது. அதாவது 99.30 சதவிகிதம் தடை செய்யப்பபட்ட நோட்டுகள் முண்டும் பெறப்பட்டுவிட்டன. அரசு எதிர்பார்த்தது போல கருப்புப் பணமானது திரும்ப வரவில்லை.
கள்ள நோட்டுகள் அதிகரிப்பு
போலி ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் 2017- 18ல் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 522,783 2016-17ல் இது 762,072 தாள்களாக இருந்தது அதாவது 31.4 சதவிகிதம் குறைவு. ஆனால் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொறுத்தவரையில் 2016-17ல் 638 தாள்களாக இருந்தது 2017-18ல் 17,929 ஆக உயர்தந்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருந்தாலும் கள்ளரூபாய் நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. எனினும் மோடி எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தைரியமான முடிவு என்பதையும் மறுப்பதற்கில்லை.
மோடிக்கு துணை
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். இந்திய மக்கள் ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்துகின்றனர், பிளாஸ்டிக் பண பயன்பாட்டிற்கு மாறவில்லை என்பதை இது தெளிவாக காட்டியது. மக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு துணையாக நின்றார்கள்.
பின்னடைவை தந்ததா
மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததாக கூறப்பட்ட நிலையில் 2 மாதங்களில் நடைபெற்ற உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வெற்றியைப் போலவே இந்த வெற்றியும் அமைந்தது.
ரிஸ்க் எடுத்த மோடி
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியை தந்துள்ளது, இந்திய பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்று எதிர்கட்சிகள் முன்வைத்த பிரச்சாரங்கள் எதுவும் எடுபடவில்லை. பணமதிப்பிழப்பிக் பலன்களை உண்மையில் அடைந்துவிட்டோமா என்றால் கேள்விக்குறியானது தான் ஏனெனில் இதற்கான வெற்றியை நோக்கி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது எனினும் பரிசாத்த ரீதியில் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு நரேந்திர மோடி எடுத்த ரிஸ்க் தைரியமானதே. இந்த நடவடிக்கையால் வாக்காளர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதை பற்றியெல்லாம் மோடி பவலைப்படவில்லை என்பது தெளிவாகிறது.