இவிஎம் ஸ்வாப்பிங் நடக்கிறது.. எதிர்க்கட்சிகளின் அதிர வைக்கும் புகார்.. உண்மையில் நடப்பது என்ன?
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் மாற்றி முறைகேடு செய்வதாக எதிர்க்கட்சிகள் புகார் வைத்து இருக்கிறது.
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் மாற்றி முறைகேடு செய்வதாக எதிர்க்கட்சிகள் புகார் வைத்து இருக்கிறது. இது தொடர்பான பல உண்மைகள் தற்போது வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுக்காக எல்லோரும் காத்து இருக்கிறார்கள். மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இதுவரை வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் எதுவும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இல்லை. இந்த நிலையில் திடீர் என்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுகிறதா? சர்ச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில்
என்ன நடக்கிறது
உத்தர பிரதேசம், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இடம்மாற்றி வருகிறார்கள் வருகிறார்கள். அதாவது பூட்டப்பட்ட அறையில் இருக்கும் எந்திரங்களை அவர்கள் எதுவும் செய்வதில்லை. மாறாக பயன்படுத்தாமல் இருக்கும் எந்திரங்களை அவர்கள் இடம் மாற்றி வருகிறார்கள்.
ஏன் குழப்பம்
இதில் என்ன பிரச்சனை என்றால், இந்த எந்திரங்களில் ஏற்கனவே வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. இந்த எந்திரங்களை முறைகேடாக, பூட்டப்பட்ட அறைக்கு கொண்டு வந்து உண்மையான எந்திரங்களுக்கு பதிலாக மாற்றி வைத்து விடுகிறார்கள். இதற்கு பெயர் இவிஎம் ஸ்வாப்பிங். அதாவது மக்கள் வாக்களித்த எந்திரங்களுக்கு பதிலாக வேறு எந்திரங்களை வைத்துவிடுகிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.
|
வீடியோ வெளியானது
இது தொடர்பாக நிறைய வீடியோக்கள் வெளியானது. முக்கியமாக உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பே இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த வீடியோக்களும் வெளியானது. இது சாதாரண நடைமுறைதான். அது எல்லாம் பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள். அதை மீண்டும் வழக்கப்படி கொண்டு செல்கிறோம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
உண்மை என்ன
இந்த நிலையில்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு என்று இருக்கும் தனித்துவம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாம் தனியாக மொபைலுக்கு இருக்கும் ஐஎம்இஐ எண்கள் போல சீரியல் எண்கள் கொண்டது. இந்த சீரியல் எண்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும். இதை வைத்து வேட்பாளர்கள் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
நிலை இதுதான்
அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு இருக்கும் சீரியல் எங்களை வைத்து, உரிய புகார் அளித்து அதை சோதனை செய்ய முடியும். இதனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டது என்ற புகாருக்கே வேலை இல்லாமல் போய் விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவ்வளவு எளிதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது.
வேறு என்ன
அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைகளுக்கு வெளியே எல்லா வேட்பாளர்களின் முகவர்களும் நிற்க வைக்கப்பட்டு இருப்பார்கள். இவர்கள் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு காவலாக இருப்பார்கள். இவர்களை மீறி வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் மாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.